ஒருபுறம் ஆளுங்கட்சியான தவெக – திமுக இடையே மோதல் முற்றியிருக்க, மறுபுறம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தன் வரலாற்றிலேயே மிகக் கடுமையான ஒரு சோதனைக் காலகட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.
“இடிமேல் இடி” விழுவதைப் போல, அடுத்தடுத்து அதிமுகவின் முக்கிய விஐபிக்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் கொத்துக் கொத்தாக தவெக நோக்கித் தாவி வருவது எடப்பாடி பழனிசாமியின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து கட்சியை மீட்டெடுக்க, மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு இபிஎஸ் கையில் எடுத்துள்ள அதிரடி ‘ரூட் லிஸ்ட்’, திரைமறைவு வியூகங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இபிஎஸ்-ஸின் அதிரடி ‘ரூட் லிஸ்ட்’
தொடர் தேர்தல் தோல்விகள், உட்கட்சிப் பூசல்கள், தற்போது தவெக-வின் ஆள்சேர்ப்பு வேட்டை என நாலாபுறமிருந்தும் அழுத்தங்கள் கூடினாலும், எடப்பாடி பழனிசாமி சோர்ந்துவிடத் தயாராக இல்லை. வரவிருக்கும் இடைத்தேர்தல்களைத் தன் அரசியல் வாழ்வின் அக்னிப் பரீட்சையாக அவர் பார்க்கிறார்.
திருச்சி கிழக்குத் தொகுதியைத் தவிர, இடைத்தேர்தல் வரவிருக்கும் மற்ற தொகுதிகள் அனைத்தும் பாரம்பரியமாக அதிமுகவின் எஃகுக் கோட்டைகள். எனவே, இந்தத் தொகுதிகளை எந்த விலை கொடுத்தாவது தக்க வைக்க வேண்டும் என்பதில் இபிஎஸ் தீவிரமாக உள்ளார். இதற்காக மற்ற அனைத்துக் கட்சிகளையும் முந்திக்கொண்டு, முதலாளாகப் பிரச்சாரக் களத்தில் குதிக்க அவர் ‘ரூட் லிஸ்ட்’ தயார் செய்துவிட்டார்.
இபிஎஸ்-ஸின் மாஸ்டர் பிளான்
தேர்தல் ஆணையத்தின் நேரடி கெடுபிடிகளுக்குள் சிக்காமல் இருக்க, ‘நேரடித் தேர்தல் பிரச்சாரம்’ என்று அறிவிக்காமல், ‘கட்சி உள்விவகாரக் கூட்டம்’ என்ற பெயரில் பிரம்மாண்ட கூட்டங்களை நடத்த மாவட்டச் செயலாளர்களுக்கு இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
கட்சித் துரோகிகள்… இபிஎஸ்-ஸின் அனுதாப அஸ்திரம்
இந்த இடைத்தேர்தல் கூட்டங்களை வெறும் ஓட்டு வேட்டையாக மட்டும் பயன்படுத்தாமல், தவெக-விற்குத் தாவிய முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்குப் பதிலடி கொடுக்கும் மேடையாக மாற்ற இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். பதவிகளுக்காகவும், சுயநலத்திற்காகவும் கட்சியை விட்டு ஓடியவர்களின் முகத்திரையைக் கிழித்து, தொண்டர்களிடம் அம்பலப்படுத்துவது. எத்தனையோ பேர் போகலாம், ஆனால் அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கு என்றும் நான் அரணாக இருப்பேன்” என உருக்கமாகப் பேசி, தொண்டர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவது.
தலைவர்கள் மாறினாலும், அடிமட்டத் தொண்டர்கள், வாக்கு வங்கி அப்படியே இருப்பதை நிரூபிக்க, பூத் கமிட்டி அளவிலான பணிகளைத் தீவிரப்படுத்துவது.
எடப்பாடியின் சவால்… தவெக-வின் அடுத்த மூவ்
அதிமுக கோட்டைகளுக்குள் புகுந்து தவெக நடத்தி வரும் ‘சைலண்ட் ஆபரேஷன்’ எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சவால் என்பது நிதர்சனம். ஆனால், கொங்கு, தென் மாவட்டங்களில் தனக்கிருக்கும் அசைக்க முடியாத செல்வாக்கை நிரூபிக்க, இபிஎஸ் கையில் எடுத்துள்ள இந்த ‘அனுதாப அஸ்திரமும், முன்கூட்டிய பிரச்சார வியூகமும்’ அதிமுக தொண்டர்களுக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.
