தமிழக அரசியல் களம் இப்போது ஒரு மிகப்பெரிய தேர்தல் பூகம்பத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தவெக தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே, எதிர்க்கட்சிகளின் குதிரை பேர அச்சம், பலம்வாய்ந்த தனிப் பெரும்பான்மையை நோக்கி முதல்வர் விஜய் ஒரு ‘மகா மாஸ்டர் பிளான்’ வகுத்துச் செயல்படத் தொடங்கியுள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்துப் பதவிகளை ராஜினாமா செய்து வருவதும், முதல்வர் விஜய் தனது ஒரு தொகுதியைத் துறந்திருப்பதும், தமிழகத்தில் மிக விரைவில் 25 தொகுதிகளுக்கான ஒரு ‘மினி பொதுத்தேர்தல்’ வரப்போவதை அப்பட்டமாக உணர்த்துகிறது.
தவெக ஆப்ரேஷன்?
சட்டமன்றத் தேர்தல் முடிந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், அ.தி.மு.க-விலிருந்து இதுவரை 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். கரூர் எம்.எல்.ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளின் நகர்வுகள் அ.தி.மு.க-வை நிலைகுலைய வைத்துள்ளன. ராஜினாமா செய்த 6 பேரில் 4 பேர் ஏற்கனவே தவெக-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டனர். மக்கள் கொடுத்த அங்கீகாரத்தை அவமதித்துவிட்டு தவெக நோக்கி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஓடுவது ‘ஜனநாயக படுகொலை’ என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.
திருச்சி கிழக்கை ராஜினாமா செய்த முதல்வர் விஜய்!
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதலமைச்சர் விஜய், கடந்த மாதம் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். தற்போதைக்கு அவர் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக மட்டுமே நீடிக்கிறார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதியும் தற்போது காலியாக உள்ளது.
அதிமுகவின் 6 இடங்கள், விஜய்யின் திருச்சி கிழக்கு, மற்றும் இன்னும் சில அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைப்பதன் மூலம் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 25 தொகுதிகளைக் காலி இடங்களாக அறிவிக்க தவெக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
25-ல் 20 இடங்கள்… தவெக வைத்துள்ள அசுர ‘டார்க்கெட்’!
இந்த 25 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைதேர்தல் நடத்தப்படும் பட்சத்தில், அதில் அசுர பலத்தைக் காட்ட தவெக வியூகம் வகுத்துள்ளது.
இடைத்தேர்தல் நடக்கும் 25 தொகுதிகளில் குறைந்தது 20 தொகுதிகளிலாவது தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருக்கிறார். திமுகவின் குதிரை பேர கணக்குகளுக்கும், அ.தி.மு.க-வின் வீழ்ச்சிக்கும் இந்த இடைத்தேர்தல் மூலமாகவே மக்கள் முன்னிலையில் இறுதிப்புள்ளி வைக்க முடியும் என தவெக நம்புகிறது.
திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகள் தங்களின் ஆட்சிக் காலங்களில் ஓரிரு தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்களைச் சந்தித்த வரலாறு உண்டு. ஆனால், புதிய அரசு அமைந்த சில மாதங்களிலேயே திட்டமிட்டு 25 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை உருவாக்கி, மக்கள் செல்வாக்கோடு 20-க்கும் மேற்பட்ட இடங்களை வாரிச்சுருட்டி, சட்டசபையில் தனது தனிப் பெரும்பான்மை பலத்தை அசைக்க முடியாத உச்சத்திற்கு எடுத்துச் செல்ல முதல்வர் விஜய் போடும் இந்த ‘மாஸ்டர் பிளான்’ தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அரசியல் அதிரடியாக பார்க்கப்படுகிறது.
