தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், நடிகரும், “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்பட்டவருமான கே. பாக்யராஜ், ஜூன் 27, 2026 அன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
பன்முகத் திறமையால் தமிழ் திரையுலகில் அழியாத தடம் பதித்த பாக்யராஜ், குடும்ப உறவுகள், சமூகப் பிரச்சினைகள், பெண்களின் வாழ்க்கை, சாதாரண மனிதர்களின் உணர்வுகள் போன்றவற்றை எளிமையாகவும் யதார்த்தமாகவும் திரையில் வடிவமைத்த இயக்குநராகப் போற்றப்பட்டார். பிரம்மாண்ட படங்களை விட சமூகப் பொறுப்புமிக்க, குடும்பம் சார்ந்த கதைகளின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தவர்.
அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாக்யராஜ் கடைசியாக நடிகை குஷ்புவின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டிருந்தார். மேலும், எழுத்தாளர் சங்கத் தேர்தல் தொடர்பாக எழுத்தாளர் சினேகன் உள்ளிட்டோருக்கு நேற்று இரவு வரை குரல் பதிவு அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எந்தவித உடல்நலக் குறைவும் வெளிப்படையாக இல்லாத நிலையில், திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதற்கிடையில், அவரது குடும்பத்தினர் பாக்யராஜின் விருப்பப்படி அவரது கண்களை தானமாக வழங்கியுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பே கண் தானம் செய்ய அவர் முறையாக பதிவு செய்திருந்தார்.
அவர் உயிரிழந்த உடனேயே, அவரது குடும்பத்தினர் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்த மருத்துவக் குழுவினர் அவரது கருவிழிகளைப் பெற்று சென்றனர். இந்த உன்னத தானத்தின் மூலம் பார்வையற்ற இருவருக்கு புதிய ஒளி கிடைக்கவுள்ளது.
கண் தானம் குறித்து பாக்யராஜ் முன்பு கூறியிருந்த கருத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
“நாம் இறந்த பிறகு நம் உடலை மண்ணில் புதைக்கிறோம் அல்லது எரிக்கிறோம். அதில் நம் கண்களும் வீணாகின்றன. ஆனால், அவற்றைத் தானம் செய்தால், நாம் மறைந்த பிறகும் யாரோ ஒருவரின் கண்கள் வழியாக இந்த உலகத்தை தொடர்ந்து காண முடியும்,” என்று அவர் கூறியிருந்தார்.
மேலும், “கண் தானத்திற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திடுவது மட்டும் போதாது. நாம் மறைந்த பிறகு அந்த விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் சம்மதமும் மிகவும் முக்கியம்,” என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
அவர் கூறியதையே அவரது குடும்பத்தினர் இன்று செயல்படுத்தி, அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றியுள்ளனர்.
சினிமா பிரபலங்கள் கண் தானம் செய்ய முன்வருவது, லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதால், தாம் முன்னுதாரணமாக இருக்க விரும்புவதாகவும் பாக்யராஜ் பலமுறை தெரிவித்திருந்தார்.
தனது திரைப்படங்களில் சமூகப் பொறுப்பையும் மனிதநேயத்தையும் வலியுறுத்திய பாக்யராஜ், நிஜ வாழ்க்கையிலும் கண் தானம் செய்து, தான் சொன்ன கருத்துகளுக்கு தானே சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
