பிரபல மூத்த தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்கு, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“நேற்று முன்தினம் கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்புவின் மகள் திருமண விழாவில், நானும் பாக்யராஜும் ஒன்றாக கலந்து கொண்டோம். மிகவும் மகிழ்ச்சியுடன் சிரித்து பேசினோம்.
பல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம். அவர் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருந்தார். ஆனால், இன்று காலை அவரது மறைவு செய்தியை அறிந்தபோது என்னால் அதை நம்பவே முடியவில்லை.”
“சிறந்த இயக்குநர், அசாத்தியமான திரைக்கதை ஆசிரியர், சிறந்த நடிகர் என இந்தியத் திரையுலகிற்கு கே. பாக்யராஜ் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். அவரது படைப்புகள் தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“அன்பு நண்பனே… அமைதியாக இளைப்பாறு. உன்னை நாங்கள் மிகவும் இழக்கிறோம். இந்த பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையை அவரது மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு மற்றும் குடும்பத்தினருக்கு இறைவன் அருள்வானாக.” என்றும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
திரைக்கதை மன்னன் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு, ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரையும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
