அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி.விஜய்பாஸ்கர், தவெக-வில் இணைவதற்குத் தீவிரமாக முயன்று வரும் சூழலில், பனையூர் தவெக தலைமை தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ ‘கிரீன் சிக்னல்’ கிடைக்காதது ஏன் என்ற பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக தலைவர் விஜய் முன்னிலையிலேயே கட்சியில் இணைய வேண்டும் என்பதில் விஜய்பாஸ்கர் தரப்பு உறுதியாக உள்ளது. தவெக தலைமைக்கு விஜய்பாஸ்கர் தரப்பிலிருந்து போடப்பட்ட முக்கிய நிபந்தனைகளில், கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் மட்டுமே கட்சியில் இணைய வேண்டும். வரும் தேர்தலில் தவெக சார்பாகத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தவெக அமைச்சரவையில் அல்லது கட்சியில் மிகக் கௌரவமான ஒரு பதவி வழங்கப்பட வேண்டும் என நிபந்தனைகளை விதித்துள்ளது.
விஜய்பாஸ்கர் தரப்பு முன்வைத்துள்ள இந்த நிபந்தனைகளில், முக்கியமாக ‘அமைச்சர் பதவி’ குறித்த கோரிக்கைதான் தவெக தலைமைக்குப் பெரும் இடைஞ்சலாகவும், யோசிக்க வைக்கும் ஒரு காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவரது இணைப்பு தள்ளிப் போவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை தவெக-வில் இணைவதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது பேச்சுவார்த்தை உடன்படாவிட்டாலோ, விஜய்பாஸ்கர் தனது சொந்த அரசியல் செல்வாக்கை நிரூபிக்கவும் தயாராகி வருகிறார். விராலிமலை தொகுதியில் தனது ஆதரவாளர்கள் மூலம் மக்களின் ‘பல்ஸ்’ பார்த்த விஜய்பாஸ்கர், சுயேச்சையாக நின்றால் கூட நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம். அவரது ஆதரவாளர்களும் இந்தத் தேர்தல் வேலைகளைச் செய்வதற்குத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
