பிரபல இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தின் தொடக்க விழா (பூஜை) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய் நேரில் கலந்துகொண்டு அர்ஜித்துக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சிறு வயது முதலே அர்ஜித் ஷங்கரின் நெருங்கிய நண்பராக இருந்து வரும் ஜேசன் சஞ்சய், நண்பருக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தத் தொடக்க விழாவில் பங்கேற்றது கோலிவுட் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் (NSD) நடிப்புப் பயிற்சி பெற்ற அர்ஜித் ஷங்கர், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமாகிறார். இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அசோக் குமார், இந்தப் படத்தை இயக்குகிறார்.
அர்ஜித்துக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.
சென்னையில் நடைபெற்ற பூஜை விழாவில் ஜேசன் சஞ்சய் தவிர, இயக்குநர்கள் ஏ.ஆர். முருகதாஸ், எச். வினோத் மற்றும் அர்ஜித்தின் சகோதரி அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இயக்குநர் ஷங்கர் தனது ஆரம்பகாலத்தில், ஜேசன் சஞ்சய்யின் தாத்தாவும் மூத்த இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அந்த வகையில், இரு குடும்பங்களுக்கிடையேயான நட்பு தற்போது அர்ஜித் ஷங்கர் – ஜேசன் சஞ்சய் மூலம் மூன்றாவது தலைமுறையாகவும் தொடர்வது திரையுலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையில், ஜேசன் சஞ்சய்யும் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
