மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு ஊக்கத் திட்டமான PM Viksit Bharat Rozgar Yojana (PM-VBRY) தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் (ஒழுங்கமைக்கப்பட்ட துறை) முதல்முறையாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், சமீபத்தில் நடைபெற்ற தகுதியான பயனாளிகளுக்கான நிதி வழங்கும் விழாவில், 15 லட்சம் ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.2,400 கோடி மதிப்பிலான பலன்கள் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் குறித்து வெளியான தகவல்களின் படி:
- இது ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் முதல்முறையாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கே பொருந்தும்.
- பணியாளர் EPFO (இபிஎஃப்ஓ) அமைப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- மாதச் சம்பளம் ரூ.1 லட்சம் அல்லது அதற்குள் இருக்க வேண்டும்.
- பணியில் சேர்ந்து குறைந்தது 6 மாதங்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை, ஊழியர்களின் EPF சம்பளத்திற்கு இணையான தொகையாக, அதிகபட்சம் ரூ.15,000 வரை வழங்கப்படும். இது இரண்டு தவணைகளாக நேரடியாக ஊழியரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
முதல் தவணை, பணியில் சேர்ந்த 6 மாத சேவை முடிந்த பிறகு வழங்கப்படும். இரண்டாம் தவணை, 12 மாத சேவை நிறைவு மற்றும் நிதிசார் கல்வித் திட்டத்தை (Financial Literacy Programme) முடித்த பிறகு வழங்கப்படும்.
மேலும், சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், இரண்டாம் தவணையின் ஒரு பகுதி குறிப்பிட்ட காலத்திற்கு சேமிப்பு/வைப்புத்தொகை கணக்கில் வைக்கப்பட்டு பின்னர் பெற அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை பற்றி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
