தமிழக அரசியல் களத்தில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதிக்கத் தீவிரமாக உழைத்து வரும் தவெக, தற்போது ஊடக உலகிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தப் பிரம்மாண்டமானத் திட்டங்களைத் தீட்டி வருகிறது. தேர்தலை எதிர்கொள்ள வலுவான ஒரு ஊடகப் பின்புலம் தேவை என்பதை உணர்ந்து, தவெக தரப்பு இரண்டு முன்னணி தொலைக்காட்சி சேனல்களை நோக்கித் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.
தவெக வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ள ரகசியத் தகவல்களின்படி, ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த ‘காவேரி டிவி’ என்ற தொலைக்காட்சி சேனலை தவெக தரப்பு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் பெயரை தற்போது ‘வெற்றி டிவி’ என மாற்றியுள்ளனர். இப்போதைக்கு தவெக-வின் அறிவிக்கப்படாத அதிகாரப்பூர்வ சேனலாக இந்த வெற்றி டிவி செயல்படும் என்று சொல்லப்படுகிறது. மிக முக்கியமாக, இந்த வெற்றி டிவிக்கு பின்னால் தவெகவின் முக்கிய நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் இருப்பதாகத் தீவிரமாகப் பேசப்படுகிறது.
மற்றொரு பக்கம், தவெகவின் மற்றொரு முக்கியப் புள்ளியான ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிர்வாகத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சமரசப் பேச்சில், அந்தத் தொலைக்காட்சி நிறுவனம், “டிவி லைசென்ஸ் எங்களிடமே இருக்கட்டும், செலவுகளை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள், வருமானத்தை பகிர்ந்து கொள்வது பற்றிப் பேசுவோம்” என்று நிபந்தனை விதித்துள்ளது.
ஆனால், தவெக தரப்போ, “பாதிப் பங்கெல்லாம் வேண்டாம், மொத்தமாகச் சேனலையே எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள், அதற்கான முழுத் தொகையையும் பேசி முடித்துக் கொள்வோம்” என்று கறாராகக் கூறிவிட்டது. இதற்கான காரசாரமான பேச்சுவார்த்தைகள் தற்போது திரைமறைவில் மிகத் தீவிரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
