தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றங்களில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தவெக தலைவர், முதலமைச்சர் விஜய்யின் வெற்றிக்கு எதிராகத் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையனை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பிரபு, இந்த அதிரடி வழக்கைத் தொடர்ந்துள்ளார். அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அமைச்சர் செங்கோட்டையனின் வேட்புமனுத் தாக்கலில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம் பெற்றுள்ள நோட்டரி சான்றொப்பம் ஏற்கனவே காலாவதியானது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலாவதியான நோட்டரி சான்றொப்பம் கொண்ட ஒரு வேட்புமனுவை, கோபிசெட்டிபாளையம் தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது முற்றிலும் சட்டவிரோதமானது என்று அதிமுக வேட்பாளர் பிரபு தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
விதிமுறைகளின்படி செல்லாத ஒரு வேட்புமனுவை ஏற்றுக்கொண்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளதால், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெற்ற வெற்றியைச் ‘செல்லாது’ என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசியல் களம் பல்வேறு பரபரப்புகளுடன் நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், தற்போதைய ஆளும்கட்சியின் முக்கிய அமைச்சரான செங்கோட்டையன் மீது அதிமுக வேட்பாளர் தொடர்ந்துள்ள இந்தத் தேர்தல் வழக்கு கோட்டை வட்டாரத்திலும், ஈரோடு மாவட்ட அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
