https://republictn.com/

தமிழக அரசியல் களம் தற்பொழுது ஆளுங்கட்சியான தவெக- பிரதான எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரு துருவங்களுக்கு இடையேயான பனிப்போராக உருவெடுத்துள்ளது. அதன் நேரடிப் பிரதிபலிப்பாக, தேனி மாவட்டத்தின் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான சுருளி அருவியில் ஒரு பரபரப்பான அரசியல் சலசலப்பு அரங்கேறியுள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் அருகே அமைந்துள்ளது சுருளி அருவி. இந்த சுருளி அருவியில் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் வாழ்ந்து வருவதாக ஐதீகம். இதனால், புண்ணிய ஸ்தலமாக விளங்கும் சுருளி அருவியில் பொதுமக்கள் தங்களது முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய அமாவாசை பௌர்ணமி நாட்களில் தர்பணம் கொடுத்து விட்டு அருவியில் நீராடி செல்கின்றனர். அதேபோல் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்காக வருகின்றனர்.

இந்த சுருளி அருவியில் கம்பம் தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜெகனாத் மிஷ்ரா இன்று அதிகாலை தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து பக்தர்கள் விட்டு சென்ற துணி மற்றும் குப்பைகளை தனது நிர்வாகிகளுடன் இணைந்து அப்புறப்படுத்தினார். பின்பு உணவு அருந்த கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பயணியர் தங்கும் விடுதிக்கு சென்றார். ஆனால், சம்மந்தபட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இருந்தும் பயணியர் தங்கும் விடுதி திறக்கப்படவில்லை.

”ஏன் திறக்கபடவில்லை?” என்று எம்எல்ஏ கேள்வி எழுப்பிய பின். ”தங்களிடம் சாவி இல்லை” என அதிகாரிகள் தெரிவித்ததால் எம்எல்ஏ ஜெகநாத் மிஷ்ரா தனது ஆதரவாளர்களுடன் தரையில் அமர்ந்து உணவு அருந்தி விட்டு சென்றார். இதனால், அப்பகுதி சிறிது நேரம் சலசலப்பாக காணப்பட்டது.

ஜெகநாத் மிஷ்ராவின் இந்த ஆய்வு பற்றி தகவல் அறிந்த திமுக ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மஹாராஜன், தனது ஆதரவாளர்கள் உதவியுடன் பயணியர் தங்கும் விடுதியை பூட்டி வைத்து கொண்டார் என தவெக கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த சுருளி அருவி ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. இந்த சட்டமன்ற தொகுதிக்கு திமுக கட்சி சார்பாக போட்டியிட்டு மஹாராஜன் வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

  • தேனி மாவட்ட செய்தியாளர், த.முத்து வெளியப்பன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago