தமிழக அரசியல் களத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார். ஒரு காலத்தில் “பாஜகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்குச் சமம்” என்று முழங்கிய தினகரனை, தற்போது டெல்லி தலைமை திட்டமிட்டே ஓரங்கட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
அமமுக கூண்டோடு கலைப்பா?
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமமுக-வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து கட்சியை விட்டு விலகி வருவதால், “அமமுக கூண்டோடு கலைந்துவிட்டது” என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இதற்குச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.
“சிலர் சொந்தக் காரணங்களுக்காக விலகி இருக்கலாம், அதற்காகக் கட்சி கலைந்துவிட்டது என்று சொல்வது பச்சைப்பொய். அவர்களுக்குப் பதிலாகப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு கட்சி கெத்தாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று அவர் கர்ஜித்துள்ளார். மேலும், அதிமுக – அமமுக இணைப்பு குறித்த பேச்சுகளுக்கு, அமமுக என்றுமே தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்காது, தனித்துவமாகவே நீடிக்கும் என முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பாஜகவின் ‘சைலண்ட் கேம்’
பாஜக மற்றும் அதிமுக-விற்குத் தான் உறுதுணையாக இருப்பதாகத் தினகரன் தொடர்ந்து கூறி வந்தாலும், டெல்லி தலைமை அவரைத் திட்டமிட்டே கைகழுவி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். டெல்லி தலைமையின் சமரசப் பேச்சை நம்பித் தேர்தலில் போட்டியிடாமல் தினகரன் ஒதுங்கியது, அவரது சொந்தக் கட்சிக்கே பூஜ்ய பலனைத்தான் தந்துள்ளது.
நிலைகுலைந்த அமமுக
அமமுக சார்பாக மன்னார்குடி தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்.எல்.ஏ-வான காமராஜும் தற்போது ஆளுங்கட்சியான த.வெ.க-விற்கு தாவிவிட்டார். இந்த எம்.எல்.ஏ தாவல் விவகாரத்தில் த.வெ.க அரசு மீது குதிரை பேரக் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய தினகரன், ஆளுநர் மற்றும் காவல்துறையிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்தார். மேலும் இந்தப் புகாரைச் சிபிஐ இயக்குநரிடமும் கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக தரப்பிலிருந்து தினகரனுக்கு எந்தவொரு அரசியல் ஆதரவோ அல்லது ஒத்துழைப்போ கிடைக்கவில்லை. மத்திய அரசும் ஆளுநரும் காட்டும் இந்த மெத்தனப் போக்கு, தினகரனை பாஜக முழுமையாகக் கைவிட்டுவிட்டது என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.
த.வெ.க மீது ஆக்ரோஷத் தாக்குதல்
ஒருபுறம் டெல்லியின் ஆதரவு இல்லாமை, மறுபுறம் தமிழகத்தில் போதிய பலமின்மை போன்ற இக்கட்டான சூழலில், த.வெ.க அரசை “இன்ஸ்டா அரசன் 24-ஆம் புலிகேசி ஆட்சி” என்றும், “மக்களுக்கு வந்த பேராபத்து” என்றும் தினகரன் மிக ஆக்ரோஷமாக விமர்சித்துள்ளார்.
மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சோசியல் மீடியாவில் ‘ரீல்ஸ்’ போட்டு ஆட்சியாளர்கள் காலம் கடத்துகிறார்கள் என்று த.வெ.க அமைச்சர்களையும் அவர் சாடியுள்ளார். இனி யாரையும் நம்பிப் பிரயோஜனம் இல்லை, தன் சொந்தப் பலத்தில் மட்டும்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தினகரன் தள்ளப்பட்டிருப்பதையே அவரது இந்த ஆக்ரோஷப் பேச்சு காட்டுகிறது.
மத்திய பாஜகவின் இந்த ‘சைலண்ட் கேம்,’ த.வெ.க-வின் ஆதிக்கம் ஆகியவற்றைக் கடந்து டிடிவி தினகரன் மீண்டும் அரசியல் களத்தில் எழுந்து வருவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க, எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் தொடர இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s.
