தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முதலமைச்சர் விஜயின் ரசிகையும், தமிழக வெற்றி கழக நிர்வாகியுமான பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, கட்சியின் சில நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.
இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்து நீக்கியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அவரது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்றும் கூறி சமரசம் பேச முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏ சரவணனை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “மேலிடத்திற்கு எல்லாம் தெரியும், உங்களது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்” என்று கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த ‘மேலிடம்’ யார் என்ற கேள்வியையும் உதயநிதி ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் முதலமைச்சர் விஜயின் ரசிகையும், தமிழக வெற்றி கழக நிர்வாகியுமாவார். அவரை ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்படுபவர்களும் அதே கட்சியின் நிர்வாகிகள் என கூறப்படுகிறது.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், புகார் அளித்த பெண் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின், “சிங்கப்பெண் பிரிவு என்பது சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக உருவாக்கப்பட்டதா, அல்லது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க பாடுபடுவதற்காக உருவாக்கப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “தனிமனித ஒழுக்கம் குறித்து பேசும் முதலமைச்சர் விஜய், தனது கட்சியின் நிர்வாகிகள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் அதில் சமரசம் பேச முயன்றதாக கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ சரவணனை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் ஆதரவாக இருந்ததாக கூறப்படும் மேலிட நிர்வாகிகள் யார் என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் இணைய இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s
