https://republictn.com/

கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த பெருந்துயரச் சம்பவம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தனது விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, இந்த வழக்கின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் கரூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அலுவலகத்தில் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, சம்பவம் நடைபெற்ற நாளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் உட்பட 10 காவலர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் சையது அலி உள்ளிட்ட சில காவலர்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் சிபிஐ தற்காலிக அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்.

மேலும், சம்பவம் நடைபெற்றபோது ஏற்பட்டதாகக் கூறப்படும் மின்தடை மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவல் தொடர்பான கோணங்களிலும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

41 உயிர்களை பலிகொண்ட இந்த துயரச் சம்பவத்தின் உண்மையான காரணங்கள் மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பது குறித்து சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago