https://republictn.com/

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோது, ‘இங்கு யாரும் ‘பவர்’ சென்டர்கள் கிடையாது. நான் ஒருவன் மட்டும்தான் ‘பவர்’ சென்டர்’ என ஓபனாக பேசினார். ஆனால், தலைமைச் செயலகத்தில் விஜய்யைச் சுற்றி 4 பவர் சென்டர்கள் இருப்பதாக அ.தி.மு.க. குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கிறது.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், ‘‘கடந்த மே 10ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்ற விஜய் தம்பி எனது ஆட்சியிலே பவர் சென்டரே கிடையாது நான் மட்டுமே பவர் சென்டர் என நரம்பு புடைக்க அந்த பதவி ஏற்பு விழாவிலே முழங்கினார்.

ஆனால் புதிய ஆட்சி பதவியேற்ற இந்த ஒரு மாத காலத்திற்குள்ளாகவே முதல்வர் விஜய் தம்பியை சுற்றி நான்கு பேர் பவர் சென்டராக தலைமை செயலகத்தை ஆக்கிரமித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட ஒட்டுமொத்த தலைமைச் செயலக நிர்வாகத்தை அவர்களது கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வந்திருப்பதை பார்த்து இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடு கவலைக்குள்ளாகி இருக்கிறது.

இந்த நான்கு பவர் சென்டர்களும் முதலமைச்சர் விஜய்தம்பியின் ஆசியுடன் இருக்கிறார்களா? இல்லையா என்று தான் கேள்வி எழுந்துள்ளது. பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி, எடப்பாடியார் ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சராக இருந்த காலங்களில் தங்களுடைய தனிப்பட்ட உதவியாளர்களை தலைமை செயலகத்திற்கு அழைத்து வந்ததாக செய்திகளும் கிடையாது வரலாறு கிடையாது. எல்லோரும் கடைப்பிடித்த மரபாக, விதியாக அதை கடைபிடித்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார்கள்.

ஆனால் முதல்வர் விஜய் தம்பி நான் மட்டுமே பவர் சென்டர் என்று சொன்னார். ஆனால் ஜான் ஆரோக்கியசாமி யார் மொழிப்போர் தியாகியா? தமிழ் இனத்திற்காக சிறை சென்றவரா? விஷ்ணுரெட்டி யார் மொழிபோர் தியாகியா? ஜெகதீஷ் பழனிச்சாமி யார்? அவர் இந்த மண்ணுக்காக இந்த மக்களுக்காக உரிமைப் போராட்டம் நடத்தி வரலாறு இடம்பெற்றவரா? ராம்குமார் யார்? அவருக்கும் தலைமை செயலகத்திற்கும் என்ன தொடர்பு? இந்த நான்கு பேரும் இந்த நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளா? அல்லது மொழி போராட்டத்தில் கலந்து கொண்ட மொழிப்போர் தியாகியா அல்லது தமிழக உரிமைக்காக போராடி சிறை சென்று அந்த தமிழ் இனத்திற்கு தமிழக மக்களுக்காக போராடிய தியாகச் செம்மல்களா?

இந்த நான்கு பேரும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணையான அந்தஸ்து கொடுத்து கோட்டையிலே அமர வைத்திருப்பது ஒட்டுமொத்த நிர்வாகத்தில் களகத்தை ஏற்படுத்தி இருப்பது முதல்வர் விஜய் தம்பிக்கு தெரியுமா? தெரியாதா? மக்களின் தீர்ப்பை மதித்து முதல்வர் விஜய் தம்பி முதல் மரியாதை செலுத்த வேண்டியது ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகியோர் கடமை அதுதான் மரபு. ஆனால் அவருடைய நண்பர்களுக்கும், நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களுக்கும், அவருக்கு தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கு எல்லாம் மரியாதை செலுத்துவதும் அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய துர்பாக்கிய சூழல் உருவாகி இருப்பதும் அரசு அதிகாரிகளும் மாண்புகளை கேள்விக்குறியாகி இருக்கிறது.

உச்சபட்ச அதிகாரம் படைத்தது தலைமைச் செயலக அலுவலகமாகும் அரசு நிர்வாகத்திற்கு தொடர்பு இல்லாதவர்களை அமர வைப்பது தமிழக அரசில் இதுவரை கண்டிராத விசித்திரமான விபரீத செயலாகும். இந்த நான்கு பேரின் வழிகாட்டிலே சிக்கி உள்ள முதல்வர் விஜய் தம்பி எப்படி சுதந்திரமாக முடிவெடுத்து தூய்மையான ஆட்சி இந்த தமிழ்நாட்டுக்கு தர முடியும் என்பதே இப்போது வாக்களித்த மக்களுக்கு எழுந்துள்ள கவலையாக இருக்கிறது.

மொத்தத்தில் நட்பு வேறு, ஆட்சி நிர்வாகம் வேறு என்பதை எப்போது புரிந்து கொள்வார் நம் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் தம்பி. டெல்லிக்கு செல்லுகிற போதும் தனி விமானத்தில் அரசு அதிகாரிகளை தள்ளி வைத்துவிட்டு இந்த நான்கு பேர்களை அழைத்துச் செல்கிறார். எந்த அரசு வந்தாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதிகாரிகள். நட்பு வேறு, ஆட்சி நிர்வாகம் வேறு என்பதை எப்போது புரிந்து கொள்வார் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் தம்பி என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது’’ இவ்வாறு உதயகுமார் கூறினார்.

எதிர்க்கட்சியான தி.மு.க., ஆண்ட கட்சியான அ.தி.மு.க. போன்ற கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் விஜய் நேரடியாக விளக்கம் கொடுத்தால்தான் உண்மையாக இருந்தாலும் சரி… வதந்தியாக இருந்தாலும் சரி… முற்றுப்புள்ளி வைக்க முடியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago