ஜம்மு காஷ்மீரில் தாய்நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு கீர்த்தி சக்ரா விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கியபோது நிகழ்ந்த நெகிழ்ச்சியான தருணங்கள், ஒட்டுமொத்த தேசத்தையும் கண்கலங்கச் செய்துள்ளன.
ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பாதுகாப்புத் துறைக்கான விருது வழங்கும் விழாவில், நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு மரணத்திற்குப் பிந்தைய கீர்த்தி சக்ரா விருதுகள் வழங்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, தலையில் குண்டு பாய்ந்த நிலையிலும் வீரத்துடன் போராடி இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்று, பின்னர் வீரமரணம் அடைந்த சிப்பாய் ஜஞ்சால் பிரவீன் பிரபாகருக்கு மரணத்திற்குப் பின் கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.
இந்த விருதை அவரது தாய் பெற்றுக்கொண்டபோது, மேடையிலேயே கண்ணீர் விட்டு உடைந்து அழுதார். அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவரை அணைத்துக்கொண்டு, கண்ணீரைத் துடைத்து ஆறுதல் கூறிய காட்சி அங்கு இருந்தவர்களை நெகிழச் செய்தது.
அதேபோல், நாட்டின் பாதுகாப்புப் பணியில் மிக உயர்ந்த தியாகத்தைச் செய்த மற்றொரு வீரரின் குடும்பத்தினருக்கும் கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற வந்த அவரது தாய் மற்றும் பெற்றோர் மேடையிலேயே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்கினர்.
அப்போது வழக்கமான அரசு நெறிமுறைகளைக் கடந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரடியாக அவர்களிடம் சென்று, அந்தத் தாயின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆறுதல் கூறி விருதை வழங்கினார்.
தேசத்திற்காக தங்களது மகன்களை இழந்த தாய்மார்களின் அளவிட முடியாத துயரத்தையும், நாட்டின் முதல் குடிமகளாக உள்ள குடியரசுத் தலைவரின் மனிதநேயத்தையும் வெளிப்படுத்திய இந்த தருணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரது பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெற்று வருகின்றன.
