பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்து வரும் ‘துரந்தர்’ (Dhurandhar) திரைப்படத்திற்கு, இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் ரன்வீர் சிங், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ஆதித்யா தார் இயக்கியுள்ளார்.
உலகளவில் சுமார் ₹1,650 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள ‘துரந்தர்’, பாக்ஸ் ஆபீஸில் உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. இந்த அசுர வசூலின் மூலம், இந்தித் திரையுலக வரலாற்றில் உலகளவில் அதிக வசூல் செய்த முக்கிய திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் இடம்பிடித்துள்ளது.
இந்தியத் திரைப்பட வரலாற்றில், ஒட்டுமொத்த இந்திய பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை ஒரே ஒரு பிரான்சைஸ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியான ‘துரந்தர்’ முதல் பாகம் ₹1,307 கோடி வசூலித்த நிலையில், அதன் தொடர்ச்சியான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் ₹1,800 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் இரு பாகங்களும் இணைந்து ₹3,100 கோடிக்கும் மேல் வசூலித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளன.
படத்தின் கதைக்களம்
இந்தப் படத்தில், நடிகர் ரன்வீர் சிங் இந்திய உளவுத்துறையின் ரகசிய திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘ஹம்ஸா அலி’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் நுழைகிறார். பின்னர் அங்குள்ள லியாரி பகுதியின் டானாக மாறி, இந்தியாவில் ₹60,000 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடவும், தற்கொலைத் தாக்குதல்களை நடத்தவும் திட்டமிடும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் மண்ணிலேயே உளவு நடவடிக்கைகள் மூலம் வேட்டையாடும் விறுவிறுப்பான ஆக்ஷன் கதையாக படம் உருவாக்கப்பட்டுள்ளத
உலக சினிமாவில் அரிதாக நடைபெறும் வகையில், இரண்டு பாகங்களுக்கான கதையும் ஒரே நேரத்தில் திட்டமிடப்பட்டு, நிதி திரட்டி, தொடர்ச்சியான (Back-to-Back) படப்பிடிப்பாக உருவாக்கப்பட்டு, குறுகிய கால இடைவெளியில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட இருமடங்காக உயர்ந்து சுமார் ₹350 கோடியை எட்டியதால், இயக்குநர் ஆதித்யா தார் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் தங்களின் ஆரம்பக்கட்ட சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு, படத்தின் லாபத்தில் பங்கு பெறும் (Backend Deal) ஒப்பந்தத்தில் பணியாற்றினர்.
படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்து, அந்த ஒப்பந்தத்தின் மூலம் இருவரும் கணிசமான லாபத்தை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
