அமெரிக்காவின் பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி, அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (UFO) குறித்த ரகசியங்களை அறிந்த முன்னணி விஞ்ஞானிகள் வரிசையாக மரணமடைவதும், காணாமல் போவதும் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தற்செயலான நிகழ்வா? அல்லது அமெரிக்காவின் எதிரி நாடுகளான சீனா, ரஷ்யா அல்லது ஈரானின் திட்டமிட்ட நிழல் யுத்தமா’? என்ற கேள்வி இப்போது வெள்ளை மாளிகை வரை எதிரொலித்துள்ளது.

விசாரணையில் இறங்கிய டிரம்ப் நிர்வாகம்
இந்த வாரத் தொடக்கத்தில், உயர்மட்ட விஞ்ஞானிகளின் தொடர் மரணங்கள் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவங்களை மிகவும் தீவிரமானவை என்று வர்ணித்துள்ள டிரம்ப், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த எஃப்.பி.ஐ உள்ளிட்ட அனைத்துப் புலனாய்வு முகமைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், “எந்த ஒரு தடயத்தையும் விட்டுவிடாமல் இந்த வழக்குகள் மறுஆய்வு செய்யப்படும்” என உறுதி அளித்துள்ளார்.

மர்மத்தின் தொடக்கம்: மௌனமான மரணங்கள்

இந்தத் தொடர் மர்மங்கள் ஜூலை 2023-ல் நாசாவின் ஜெட் புரொபல்ஷன் ஆய்வக இயற்பியலாளர் மைக்கேல் டேவிட் ஹிக்ஸின் மரணத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, அணு இயற்பியலாளர் மற்றும் எம்ஐடி பேராசிரியர் நூனோ லூரேரோ தனது வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். வானியற்பியலாளர் கார்ல் கிரில்மியர், புறக்கோள்களில் நீர் இருப்பைக் கண்டறியும் முக்கிய ஆய்வில் இருந்தபோது, தனது வீட்டின் வராந்தாவிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இவர்களின் மரணங்கள் தற்செயலானவை என்பதை விட, ஏதோ ஒரு பெரிய ரகசியத்தை மறைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

காணாமல் போன ரகசியங்கள்
மரணங்களை விடக் கொடுமையானது விஞ்ஞானிகள் எந்தத் தடயமும் இன்றி காணாமல் போவது. பிப்ரவரியில் காணாமல் போன விமானப்படை மேஜர் ஜெனரல் வில்லியம் மெக்கலெலண்ட் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் காணாமல் போவதற்கு முன்பு, யுஎஃப்ஓக்கள் குறித்த தனது ஆய்வுக்காகக் குடியரசுக் கட்சி எம்.பி. எரிக் பர்லிசனை இருமுறை தொடர்பு கொள்ள முயன்றது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தின் அந்தோனி சாவேஸ் மற்றும் மெலிசா காசியாஸ் ஆகியோரும் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். இவர்கள் அனைவரும் விண்வெளி பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத ரகசியங்களை அணுகும் அதிகாரம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிரி நாடுகளின் கைவரிசையா?

மிசௌரி எம்.பி. எரிக் பர்லிசன் உள்ளிட்ட அரசியல் ஆய்வாளர்கள், இதற்குப் பின்னால் சீனா, ரஷ்யா அல்லது ஈரான் போன்ற நாடுகள் இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்புகின்றனர். அமெரிக்காவின் விண்வெளி ஆதிக்கத்தையும், அணுசக்தி ரகசியங்களையும் முடக்க அந்த நாடுகள் ‘ ஹனி டிராப் அல்லது நேரடி ஆள் கடத்தல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ஜேசன் தாமஸ் என்ற ஆராய்ச்சியாளரின் உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது போன்ற சம்பவங்கள், இந்தச் சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்துகின்றன.

அறிவே அதிகாரம் என நம்பப்படும் இன்றைய டிஜிட்டல் உலகில், அந்த அறிவைக் சுமந்திருக்கும் விஞ்ஞானிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. “இனி இரக்கம் காட்டப்படாது” என்று ஈரானை எச்சரித்த டிரம்ப், இந்த விஞ்ஞானிகளின் மரணத்திற்குப் பின்னால் வெளிநாட்டினரின் சதி இருப்பது உறுதியானால், அது உலகப் போருக்குச் சமமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ரகசியங்களின் சுமைதான் இந்த விஞ்ஞானிகளின் உயிருக்கு எமனாக மாறியதா? அல்லது வல்லரசுகளுக்கிடையேயான ரகசியப் போரின் பலியாடுகளா இவர்கள்? விடை எஃப்.பி.ஐ-யின் கைகளில் உள்ளது.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *