சிபிஎஸ்இ (CBSE) 12-ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் (OSM – On-Screen Marking System) நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய 3 Gen-Z இளைஞர்கள், நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன்னிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகள் மற்றும் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) முறையில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கல்வி நிலைக்குழுவின் தற்போதைய கூட்டத் தொடர் டெல்லியில் நடைபெற்றது.
இந்தக் குழுவின் முன்பு, முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த 17 வயதான சார்த்தக் சித்தாந்த் (Sarthak Sidhant) நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் நேரில் ஆஜராகி, தனது விசாரணை ஆதாரங்கள், அறிக்கைகள் மற்றும் விளக்கப் படங்களை சமர்ப்பித்தார்.
மத்திய அரசை அதிரவைத்த 3 Gen-Z இளைஞர்கள்
சார்த்தக் சித்தாந்த் (Sarthak Sidhant):
சிபிஎஸ்இ-யின் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் திட்டத்துக்கான டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்து, குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக விதிமுறைகள் மாற்றப்பட்டதாகவும், அதில் 15-க்கும் மேற்பட்ட முறைகேடுகள் இருப்பதாகவும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார்.
வேதாந்த் ஸ்ரீவஸ்தவா (Vedant Shrivastava):
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் தனக்குத் தவறான விடைத்தாள் வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஆதாரங்களுடன் பதிவிட்டு, நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தினார்.
நிசர்க் அதிகாரி (Nisarga Adhikary):
19 வயதான எத்திகல் ஹேக்கரான இவர், சிபிஎஸ்இ-யின் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் இணையதளத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து வெளிக்கொண்டு வந்தார்.
இந்த மூவரும் வழங்கிய டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் நாடாளுமன்றக் குழுவின் விசாரணையைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த இளைஞர்களின் அறிவுக்கூர்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் நாடாளுமன்ற நிலைக்குழு வரை சென்றதைத் தொடர்ந்து, மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் சிபிஎஸ்இ செயலாளர் ஹிமான்ஷு சிங் ஆகிய இரு உயரதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
. ஒரு பெரும் கல்வி வாரியத்தின் முறைகேட்டை இளைஞர்கள் டிஜிட்டல் முறையில் அம்பலப்படுத்திய இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
