நெல்லையில் காதல் விவகாரம் காரணமாக பெண் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் மூலக்கரப்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட செண்பராம்புதூர் பகுதியைச் சேர்ந்த சிவனு மற்றும் வைரம்மாள் தம்பதிகளின் மகள் அமுதா (20) திருமணமாகாதவர்.
இவருக்கு அவரது அக்காள் கணவருடன் தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று அமுதா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் மூலக்கரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இது தற்கொலை அல்ல என்பது தெரியவந்துள்ளது.
குடும்பத் தகராறு மற்றும் கள்ளத் தொடர்பு காரணமாக, பெற்றோரே இணைந்து அமுதாவுக்கு விஷம் கொடுத்து, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்து, அதனை தற்கொலை போல காட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் அமுதாவின் பெற்றோர் சிவனு மற்றும் வைரம்மாள் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அக்காள் கணவருடன் ஏற்பட்டதாக கூறப்படும் உறவு காரணமாக, பெற்றோரே மகளை கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடிய இந்த சம்பவம், நாங்குநேரி–மூலக்கரப்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகமும் ஏற்படுத்தியுள்ளது.
