சென்னை ராமாபுரம் அடுத்த நந்தம்பாக்கம் சாந்திநகர் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இரும்பு மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மான்சி என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த 35 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சென்னை ராமாபுரம் அருகே உள்ள சாந்திநகர் பகுதியில், மெட்ரோ பணிகளில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்பின் மேற்பகுதியில் இரும்பு மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது.
நேற்று இரவு அவர்கள் ஐபிஎல் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென அந்த மேற்கூரை இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மான்சி என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும், 35 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். தகவல் அறிந்த நந்தம்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் கொல்கத்தாவைச் சேர்ந்த சுகுமானி என்பவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளியிலிருந்து புதிய நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
மேலும், அப்பகுதியில் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னரே அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளர் ரங்கநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
