Hansika

திரையுலகில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் ‘காஸ்டிங் கௌச்’ எனப்படும் பாலியல் சுரண்டல் விவகாரம் குறித்து நடிகை ஹன்சிகா மோட்வானி அண்மையில் தெரிவித்த கருத்துக்கள், சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு நடிகை தனது தனிப்பட்ட அனுபவத்தை மட்டும் வைத்து ஒரு சமூக அவலத்தைப் பொதுமைப்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு ஹன்சிகாவின் இந்த நேர்காணல் சாட்டையடி.

அறியாமையின் உச்சமா? சலுகை பெற்ற திமிரா?

ஹன்சிகா தனது திரைப்பயணத்தை மிக இளம் வயதிலேயே தொடங்கியவர். ‘ஷாகா லாகா பூம் பூம்’ போன்ற தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று வரை முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அனுபவம் வாய்ந்த ஒரு நடிகையிடம் திரையுலகின் இருண்ட பக்கம் குறித்துக் கேட்கப்பட்டபோது, “உண்மையாக வேலை செய்ய விரும்புபவர்களுக்கு இது நடக்காது” என்று தப்பித்துக் கொள்ள முயன்றதுதான் விவாதத்தின் மையப்புள்ளி.

அவரது இந்தப்பேச்சு , பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட அத்தனை கலைஞர்களின் உழைப்பையும், நேர்மையையும் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. “எனக்கு நடக்கவில்லை, அதனால் இது பற்றி எனக்குத் தெரியாது” என்று அவர் கூறுவது, ஒரு மிகப்பெரிய சமூகப் பொறுப்பற்றத் தனம். ஒருவருக்கு ஒரு பாதிப்பு ஏற்படவில்லை என்பதற்காக, அந்தப் பாதிப்பே இல்லை என்று மறுப்பது ‘தர்க்க ரீதியிலான முட்டாள்தனம்’ இணையவாசிகள் சுட்டிக்காட்டியது போல, “எனக்கு சர்க்கரை நோய் இல்லை, அதனால் அது ஒரு நோயே இல்லை” என்று கூறுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை.

பாதுகாப்பான விளையாட்டு
ஹன்சிகா 16 வயதிலேயே ஹிமேஷ் ரெஷாமியா போன்ற வயதில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கியவர். திரையுலகின் அதிகார படிநிலைகளை நன்கு அறிந்தவர். அப்படியிருக்கையில், “எனக்குத் தெரியாது” என்று அவர் நழுவுவது, திரையுலகில் உள்ள பெரிய மனிதர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவர் ஆடும் ‘பாதுகாப்பான விளையாட்டு’ என்றே விமர்சிக்கப்படுகிறது.

தொகுப்பாளர் எவ்வளவோ முயன்றும், “இதெல்லாம் ஒரு சாக்குப்போக்கு” என்பது போன்ற தொனியிலேயே ஹன்சிகா பதிலளித்தது, பாதிக்கப்பட்ட பெண்களின் ‘மீ டூ’ போராட்டங்களைச் சிறுமைப்படுத்துவதாக அமைந்துள்ளது. திறமை இருந்தும், வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக சுரண்டப்பட்ட எத்தனையோ பெண்களின் வலியை, “அவர்கள் சரியாக வேலை செய்ய விரும்பவில்லை” என்று ஒற்றை வரியில் ஹன்சிகா கடந்து சென்றது கண்டிக்கத்தக்கது.

சமூக வலைதளங்களின் சாட்டை அடி
இணையவாசிகள் ஹன்சிகாவை “அறியாமை உடையவர்” என்று முத்திரை குத்தியதில் வியப்பில்லை. வாய்ப்புக்காக சலுகை பெற்றவர்கள், அடித்தட்டு மக்களின் அல்லது போராடி வரும் கலைஞர்களின் வலியைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது ‘எலைட்டிசம்’ எனப்படும் உயர்வர்க்கச் சிந்தனையின் வெளிப்பாடு.

ஒரு நடிகையாக சமூகத்தில் நடப்பவை குறித்த விழிப்புணர்வு அவருக்கு இருக்க வேண்டும். தனக்கு நடக்காவிட்டாலும், சக கலைஞர்களுக்கு நடக்கும் அநீதிக்குக் குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அதை அவமானப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

திரையுலகில் வெற்றி பெறுவது என்பது கடின உழைப்பால் மட்டுமே சாத்தியம் என்ற ஹன்சிகாவின் வாதம் ஒருபுறம் உண்மையாக இருந்தாலும், அந்தப் பயணத்தில் குறுக்கிடும் ‘காஸ்டிங் கௌச்’ போன்ற தடைகளை மறுப்பது என்பது அப்பட்டமான பொய். ஹன்சிகா போன்ற ஆளுமைகள் தங்களின் வார்த்தைகளில் இன்னும் கூடுதல் பொறுப்புணர்வைக் காட்ட வேண்டும். இல்லையெனில், இணையம் அவர்களை ‘அறியாமை உடையவர்’ என்று மட்டுமல்ல, ‘மனிதாபிமானமற்றவர்’ என்றும் முத்திரை குத்தத் தயங்காது.

உண்மை கசப்பானதுதான், ஆனால் அந்த உண்மையை மறைக்க முயல்வது அதைவிடக் கொடுமையானது.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *