செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக தாய் மற்றும் மகன் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் வசித்து வருபவர் சேகர் (52). இவரது மனைவி மாலா மற்றும் மகன் பிரபாகரன் (25) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே இன்று கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த பிரபாகரன் தனது தாய் மாலாவை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த தந்தை சேகர், தன்னிடம் இருந்த கொக்கு சுடும் துப்பாக்கியால் மகன் பிரபாகரனை சுட்டுள்ளார்.
இதில் பிரபாகரனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. தாய் மாலாவும் காயமடைந்தார். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து மாமல்லபுரம் காவல் நிலைய போலீசார், இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், துப்பாக்கியால் சுட்ட சேகர் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மது போதையில் நடந்ததா என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
