https://republictn.com/

தாயின் நினைவாக நடிகர் சாயாஜி ஷிண்டே செய்த செயல் தற்போது பலராலும் பாராட்டப்பட்டு பேசுபொருளாக மாறியுள்ளது.

சாயாஜி ஷிண்டே, இந்திய திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். பாலிவுட், கோலிவுட் மற்றும் டாலிவுட் உள்ளிட்ட பல்வேறு இந்திய திரைப்படத் துறைகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றுள்ளார். “அழகிய தமிழ் மகன்”, “தூள்”, “வேலாயுதம்”, “மாவீரன்”, “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சாதாரா பகுதியை சேர்ந்த சாயாஜி ஷிண்டே, விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். தனது ஆரம்ப வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 1978ஆம் ஆண்டு, அவர்களது குடும்ப நிலம் அணைத் திட்டத்திற்காக அரசால் கைப்பற்றப்பட்டது. அதற்குப் பதிலாக, நீர்ப்பாசனத் துறையில் காவலாளி வேலை சாயாஜி ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர், கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கழித்து, 2022ஆம் ஆண்டில்தான் அந்த மாநில அரசு அவருக்கு மாற்று நிலத்தை வழங்கியது.

இந்நிலையில், 2016ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் கடும் வெயில் தாக்கம் காரணமாக மக்கள் அவதிப்பட்டனர். அப்போது நிழலுக்காக ஒரு மரம் கூட இல்லாத நிலையை கண்டு சாயாஜி மனம் உடைந்ததாக கூறப்படுகிறது.

அதே ஆண்டில், அவரது தாயார் 92 வயதை எட்டியிருந்தார். எந்த நேரத்திலும் தாயை இழக்க நேரிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த சாயாஜி, தாயின் நினைவை என்றும் நிலைத்திருக்கச் செய்ய ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தார்.

தனது தாயிடம் சென்று, “உங்களை எப்போதும் என்னுடன் வைத்திருக்க எனக்கு சக்தி இல்லை. ஆனால், உங்கள் உடல் எடைக்கு நிகரான அளவில் விதைகளை விதைத்து, அவற்றை மகாராஷ்டிரா முழுவதும் நட்டுவிடப் போகிறேன். அந்த மரங்கள் வளர்ந்து பூத்து குலுங்கும் போதெல்லாம் நான் உங்களை உணர்வேன்” என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மரக்கன்றுகளை தனது கிராமத்திற்கு வரவழைத்து நட்டுள்ளார்.

தற்போது அந்த மரங்கள் வளர்ந்து பெரிய காடாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. வெறும் புகழும் பணமும் மட்டுமே மனநிறைவை தராது என பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்த சாயாஜி ஷிண்டே, மரங்களை வளர்ப்பதன் மூலம் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார்.

சுமார் 60 ஆண்டுகளாக ஒரு மரம் கூட இல்லாமல் வறண்ட நிலையில் இருந்த அந்த கிராமத்தில், சாயாஜி ஷிண்டேவின் முயற்சியால் தற்போது 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து பசுமை சூழல் உருவாகியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago