தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ் வீடியோ மூலம் அழைப்பு விடுத்திருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
“தவெக அரசு ரீல்ஸ் அரசாகவே மாறிவிட்டது” என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் வடிவேலு கூறிய “பில்டப் பண்றோமோ பிலாவிடுறோமோ அது முக்கியம் இல்லை; நம்மை உலகம் பார்த்துக்கொண்டே இருக்கணும்” என்ற வசனம் அமைச்சர் கீர்த்தனாவின் செயலுக்கு பொருத்தமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முன்னதாக, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஒற்றை சாளர முறை மூலம் 21 நாட்களில் அனுமதி வழங்குதல், அதிவிரைவு தொழில் மண்டலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முந்தைய அரசுகளின் காலத்திலேயே செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அமைச்சர் கீர்த்தனா முதலீட்டாளர்களை ரீல்ஸ் வீடியோ மூலம் அழைத்துள்ளார்.
இதற்காக மாநில முதலீட்டு ஊக்குவிப்பு வாரியமான ‘Guidance Tamil Nadu’ அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், அந்த அனுபவத்தை ரீல்ஸ் வடிவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க 21 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதே 21 நாட்கள் அனுமதி முறை ஏற்கனவே முந்தைய ஆட்சிக் காலத்திலேயே நடைமுறையில் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
முன்னர் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளித்து வந்த நடைமுறைக்கு மாறாக, தற்போது ரீல்ஸ் வீடியோ மூலம் விளம்பரம் செய்யப்படுவது கிண்டலுக்குள்ளாகி இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
