தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையில், பொதுவாக பணியிட நியமனங்களில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வந்ததாக நீண்டகாலமாக குற்றச்சாட்டு நிலவுகிறது.
இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் முதன்முறையாக 21 புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட மொத்தம் 461 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், செய்தி மக்கள் தொடர்பு துறை (DIPR) பணியிடங்களில் பொதுமக்களும், தகுதியுடைய நபர்களும் வேலைக்கு சேரும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.
பிஆர்ஓ, புகைப்படக் கலைஞர் உள்ளிட்ட பணிகளில் கடந்த பல ஆண்டுகளாக அரசியல் தொடர்புடையவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் மட்டுமே நியமனம் வழங்கப்பட்டு வந்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
இந்நிலையில், தற்போது அமைந்துள்ள அரசு இந்த பணியிடங்களுக்கு பொதுவான விளம்பர அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் DIPR துறையில் தகுதியுடைய புதிய பணியாளர்களை நியமிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த மாற்றம் கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்ட முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது. இதில் அரசியல் சார்பில்லாத பொதுமக்களும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும், செல்வாக்கு இல்லாதவர்களும் அனைவரும் சமமாக விண்ணப்பிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதே நேரத்தில், நியமனத்திற்குப் பிறகு முன்னுரிமை வழங்கப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
