சென்னை கோடம்பாக்கத்தில் 11 வயது சிறுவனுக்கு மது ஊற்றி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உறவினர் வீட்டில் தங்கியிருந்த அந்த சிறுவனுக்கு, மது போதையில் இருந்த காவலர் உள்ளிட்ட மூவர் சேர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுவன், காவலரை தாக்கிவிட்டு அறையை பூட்டிவிட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர், அசோக் நகர் காவல் நிலையத்தில் சிறுவன் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில், வடபழனி காவல் நிலைய தலைமைக் காவலர் வேலப்பன் (35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட காவலரை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 311வது பிரிவின் கீழ் உடனடி பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களில் எந்தவித சமரசமும் இருக்காது என்றும், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
