திருக்குறளின் சிறப்பு என்னவென்றால், எந்த ஒரு நூலையும் எழுதத் தொடங்கும்போது யாரையாவது வாழ்த்தி தொடங்க வேண்டும் என்பதே மரபு. அதன்படியே திருவள்ளுவர் தனது நூலை முதல் அதிகாரமாக “கடவுள் வாழ்த்து” என்ற அதிகாரத்துடன் தொடங்குகிறார்.
கடவுளை வாழ்த்திய பிறகு, அந்த நூலில் எதன் சிறப்பைப் பேசப் போகிறார் என்பதை எடுத்துரைக்க வேண்டும் அல்லவா? அதற்காக இரண்டாவது அதிகாரமாக “வான்சிறப்பு” என்பதை அமைத்துள்ளார். ஏனெனில், மழை எல்லோரிடமும் சமமாக பொழிகிறது; ஏழை, பணக்காரன் என்று பாராமல் உலகனைத்திற்கும் உயிர் அளிப்பது வானம்.
அடுத்து, இந்த நூல் யாருடைய பெருமையைப் பேசுகிறது? நம்முடைய பெருமையா? இல்லை. நமக்கு முன்னால் வாழ்ந்து சென்ற சான்றோர்களின் பெருமையை எடுத்துரைக்கிறது. அதனால் மூன்றாவது அதிகாரம் “நீத்தார் பெருமை” ஆகும்.
இவ்வாறு கடவுளை வாழ்த்தி, வானத்தின் சிறப்பைச் சொல்லி, சான்றோரின் பெருமையை எடுத்துரைத்த பின், இந்த நூலின் நோக்கம் என்ன என்பதை வள்ளுவர் விளக்குகிறார். அது “அறம்” என்பதே. திருக்குறள் முழுவதும் அறத்தையே வலியுறுத்துகிறது.
அந்த அறம் எங்கு தொடங்குகிறது தெரியுமா?
அது இல்வாழ்க்கை யிலிருந்து தொடங்குகிறது. இல்லற வாழ்வே அறத்தின் அடிப்படை என்று வள்ளுவர் கூறுகிறார்.
ஒரு மனிதன் திருமண வாழ்க்கைக்கு தயாராக இருக்க வேண்டுமெனில், அவர் செய்ய வேண்டிய பல கடமைகளையும் உதவிகளையும் வள்ளுவர் எடுத்துரைக்கிறார். அதற்கான அதிகாரம் “இல்வாழ்க்கை”.
அதன் பின், அந்த இல்லற வாழ்க்கையில் துணையாக இருப்பவரின் சிறப்பை எடுத்துரைக்கிறார். அதுவே “வாழ்க்கைத்துணை நலம்” என்ற அதிகாரம். குடும்ப வாழ்க்கையில் கணவன் மட்டுமல்ல, மனைவியும் சமமாக துணைநிற்க வேண்டும் என்பதைக் கூறுகிறது.
இல்வாழ்க்கையும், நல்ல வாழ்க்கைத்துணையும் ஒன்றாக சேர்ந்த பின், அந்த இல்லத்தில் என்ன வரும்? “மக்கட்பேறு”. ஒரு குழந்தையின் பிறப்பு குடும்பத்திற்கு அளவிட முடியாத மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும் தருகிறது என்பதை வள்ளுவர் அழகாக எடுத்துரைக்கிறார்.
அதன் பின், அந்த வீட்டில் மேலும் பெருகுவது என்ன? செல்வமா? சொத்தா? இல்லை.
அது “அன்புடைமை”. அன்பே ஒரு குடும்பத்தின் மிகப் பெரிய செல்வம் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
அப்பா, அம்மா, குழந்தை என்ற இரத்த உறவுகளுக்குள் அன்பு இருப்பது இயல்பு. ஆனால், அந்த அன்பை இரத்த உறவுகளைத் தாண்டி மற்றவர்களிடமும் காட்ட வேண்டும் என்பதற்காக அடுத்த அதிகாரமாக “விருந்தோம்பல்” வருகிறது.
வீட்டிற்கு வருபவர்களை அன்புடன் வரவேற்று, உணவு அளித்து, மரியாதை செய்வது தமிழர் பண்பாடு என்பதை வள்ளுவர் கூறுகிறார்.
அதன்பின், குழந்தைகள் வளர்ந்து வெளி உலகிற்குச் செல்லும்போது எப்படி பேச வேண்டும் என்பதையும் அவர் கற்பிக்கிறார். அதற்கான அதிகாரம் “இனியவை கூறல்”.
எப்போதும் இனிமையாகப் பேச வேண்டும்; கடுமையான வார்த்தைகள் மனிதர்களை விலக்கிவிடும் என்பதையும் வள்ளுவர் உணர்த்துகிறார்.
இவ்வாறு வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும், ஒவ்வொரு மனிதப் பண்பும், ஒவ்வொரு சமூகப் பொறுப்பும் திருக்குறளில் அழகாக சொல்லப்பட்டுள்ளது. அதனால் தான் 1330 குறள்களும் இன்று வரை உலகம் முழுவதும் மனித வாழ்விற்கான ஒளிவிளக்காக திகழ்கின்றன.
