கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் (Goondas Act) பாய்ந்துள்ளது.
அண்மையில் தமிழகத்தை அதிரவைத்த இந்த சம்பவத்தில், சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கார்த்திக் என்பவர் இந்த கொடூரக் குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டவர் எனவும், மோகன்ராஜ் உடந்தையாக இருந்தார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது நடவடிக்கையின் போது கார்த்திக் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதனிடையே, குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
இந்த நடவடிக்கையால், இருவரும் ஜாமீனில் வெளியே வர இயலாத வகையில் ஒரு வருடம் வரை தடுப்பு காவலில் வைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கொடூரக் குற்றமாக கருதி எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
