தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாள் பயணமாக நடைபெறும் இந்த டெல்லி பயணத்திற்காக, அவர் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 12.30 மணி அளவில் அவர் டெல்லி சென்றடைவார் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு மற்றும் மரியாதை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகள், நிதி தொடர்பான விவகாரங்கள் மற்றும் மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்களையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
குறிப்பாக, நிதி ஒதுக்கீடு, நீர்வளத் திட்டங்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று மாலை 7.30 மணி அளவில் சந்தித்து, தமிழ்நாட்டின் நிதி சார்ந்த தேவைகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு நாள் பயணமாக நடைபெறும் இந்த டெல்லி பயணத்தின் போது, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களைத் தொடர்ந்து, நாளை காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
