விசாகப்பட்டினம் மாவட்டத்தில், வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிசிடிவி காட்சிகள் மூலம் வாடகைக்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினம் அக்கயபாலம் சீனிவாசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் பார்வதி – சந்திரசேகர் தம்பதியர். பார்வதி பெரும்பாலும் ஹைதராபாத்தில் உள்ள மகன் வீட்டில் தங்கியிருந்து, அவ்வப்போது விசாகப்பட்டினத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
சம்பவம் நடந்த நாளில் பார்வதி வீட்டில் தனியாக இருந்தபோது, வெளியே சென்று வந்த கணவர் சந்திரசேகர், மனைவி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சம்பவ நாளில் ராமு என்ற நபர் அப்பார்ட்மெண்ட் வளாகத்திற்குள் நுழைந்து சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. விசாரணையில், ராமு என்பவர் சந்திரசேகரின் கடையை வாடகைக்கு எடுத்து சலூன் நடத்தி வந்த நபர் என்பதும், ஆறு மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்ததும் தெரியவந்தது.
மேலும், சம்பவ நேரத்தில் ராமுவின் மொபைல் போன் அதே பகுதியில் செயல்பட்டது மொபைல் டவர் சிக்னல் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. பார்வதி தொடர்ந்து வாடகை தொகையை கேட்டு வந்ததால், அவர்களுக்குள் தகராறு இருந்து வந்ததாகவும் போலீசார் கண்டறிந்தனர்.
கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே ராமு தப்பிச் செல்ல முயன்றது போலீசாரின் சந்தேகத்தை அதிகரித்தது. தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், விசாகப்பட்டினம் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த ராமுவை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவரிடமிருந்து பார்வதியிடம் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் ஐந்து சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவ நாளில் வாடகை விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராமு, பார்வதியின் கை, கால்களை கட்டி வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்ததும், பின்னர் தடயங்களை மறைக்க மிளகாய் பொடி தூவி நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து ராமுவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
