சென்னையில் பெண் காவலரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் இந்த அத்துமீறல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து திருப்பதி வரை நடைபெற்று வரும் திருப்பதி குடை ஊர்வலம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று அண்ணா நகர் அருகே வந்த ஊர்வலம், அங்கிருந்து புறப்பட்டு அயனாவரம் வழியாக சென்றபோது, பாதுகாப்புப் பணியில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தட்டிக்கேட்ட பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரை ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் கூச்சலிட்டு அருகில் இருந்த காவலர்களை அழைத்துள்ளார். உடனடியாக அங்கு வந்த காவலர் குழுவினர், அந்த நான்கு பேரையும் அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், பெண் காவலரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாக தெரியவந்ததாக கூறப்படுகிறது.
விசாரணையில், சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர் வில்லிவாக்கம் கிழக்கு பகுதி தவெக துணைச் செயலாளர் எனக் கூறப்படும் மதன்ராஜ் என்பதும், அவர் அண்ணாநகர் தொகுதி தவெக எம்.எல்.ஏ ராம்குமாரின் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்து வருபவர் என்பதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, அண்ணாநகர் எம்.எல்.ஏ ராம்குமார், அயனாவரம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்குமாறு கூறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, இனிமேல் எந்தத் தவறும் செய்ய மாட்டோம் என அந்த நான்கு பேரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை காவல்துறையினர் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
பெண் காவலரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் தவெக நிர்வாகியை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், காவல் நிலையத்திற்கு வந்த தவெக பிரமுகர் ஒருவர் சம்பந்தப்பட்ட நபரை அழைத்துச் செல்ல முயன்றதாகக் கூறி, எதிர்க்கட்சியினரும் சமூக வலைதளப் பக்கங்களிலும் தவெக கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த விவகாரத்தில், காவல் நிலையத்திற்குள் நுழைந்த தவெக எம்.எல்.ஏ ராம்குமார், பொதுமக்களிடம் சிக்கிய அந்த நபரை காவல் நிலையத்திற்குள்ளேயே சென்று மீட்டு அழைத்துச் சென்றதாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி தனது X பக்கத்திலும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கும், பெண்களுக்கும், குறிப்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், முதல்வர் லண்டன் பயணத்தில் பிஸியாக இருப்பதாகக் கூறியும் அரசுக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், “காவல் நிலையங்களில் தவெகவினர் தலையிடுவதில்லை” என அண்மையில் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்ட கருத்தையும் சுட்டிக்காட்டி அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. “காவல் நிலைய விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று கூறிவிட்டு, எம்.எல்.ஏ ராம்குமாரே நேரடியாகச் சென்று காவல் நிலையத்திலிருந்து குற்றம் சாட்டப்பட்டவரை அழைத்துச் சென்றது ஏன்?” என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.
முன்பு திமுக நிர்வாகிகள் மீது இதுபோன்ற புகார்கள் எழுந்தபோது எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததைப் போல, தற்போது தவெகவினரும் அத்துமீறலில் ஈடுபடுவதாகக் கூறி “திமுக பாணியில் தவெக..!” என்ற விமர்சனத்தையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.
அயனாவரம் சம்பவம் மட்டுமின்றி, அண்மைக்காலமாக தவெக நிர்வாகிகள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான புகார்கள் எழுந்து வருவதாகவும், இதனை எதிர்க்கட்சிகள் முக்கிய அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரத்யேக விவாதங்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகியே பெண் காவலரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அதிகார துஷ்பிரயோகம் செய்து அந்த நான்கு பேரையும் அண்ணாநகர் எம்.எல்.ஏ ராம்குமார் விடுவித்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பெண் காவலரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கூறப்படும் நபர்களை விடுவித்த விவகாரம் காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தால் மனமுடைந்த பெண் காவலர், பல காவலர்களிடம் தனக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை எனப் புலம்பியதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவம் சாதாரண நபர்களால் நிகழ்த்தப்பட்டிருந்தால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி என்பதாலேயே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய வழக்குப்பதிவு செய்யாமல் விடுவித்ததாகவும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி நடவடிக்கையிலிருந்து தப்பவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுபோன்று பல்வேறு இடங்களில் சம்பவங்கள் நடைபெற்றாலும், தவெக ஆளுங்கட்சியாக இருப்பதால் அதன் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் விடப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், பெண் காவலரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படும் தவெக நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் மீது தற்போது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.
