நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் தேர்தலை சந்தித்த விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. இதனையடுத்து முதல்வராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து திமுகவினர் ரீல்ஸ் மாடல் ஆட்சி என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தவெக மற்றும் விஜய்யை அவ்வப்போது ஒருமையில் பேசி வருவதை வழக்காக கொண்டுள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் நடந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ். பாரதி: சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியினர் செய்யும் தவறுகளை எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். ஆனால் தொலைக்காட்சிகள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைக்க முயல்கின்றனர்.
விஜய் இந்தியாவின் அடுத்த பிரதமராக வரலாம் எனப் பேசுவது அவர்களின் எல்லை இல்லாத கற்பனை. கற்பனைக்கு எந்த எல்லையும் கிடையாது. மேலும் பேசிய அவர் காங்கிரஸ் காரர்களுக்கு சொரணை இருந்தால் வெளியே வரட்டும். இல்லை அவர்தான் பிரதமர் என்றால் இவர்களும் கூஜா தூக்கட்டும் என விமர்சித்தார்.
அதற்கு முன்பாக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி: 3 ஃபைல்கள் நீ அவிழு நானும் அவிழ்க்குறேன். நான் மோசமான ஆளு. இப்படிதான் ஜெயலலிதாவும் வாலாட்டிச்சு. அதன் விளைவு என்ன என்பதை அந்த அம்மா உயிரோடு இருந்தா கேட்டு தெரிஞ்சுக்கோங்க . அன்னைக்கு ஜெயலலிதா பெரிய தப்பு ஒன்றும் செய்யவில்லை. டான்சி நிலத்தை வாங்கினார். அரசு நடத்தை வாங்க கூடாது. நான் டான்ஸ் நிலத்தை வாங்கியது தவறு என்று ஒரு அறிக்கை கொடுத்து இருந்தால் முடிந்திருக்கும். உடனே அந்த அம்மையார் திமுகவில் ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேடுகிறேன். எதிரிகளை காணவில்லை என்று சொன்னார் ஜெயலலிதா. ஒரே ஒரு கலைஞர் தான் வெற்றி பெற்றார். அவர் ராஜினாமா செய்தார்.
பிறகு பருதி இளம்வழுதி, செல்வராஜ் எம்.எல்.ஏ ஆனார்கள். அந்த தைரியத்தில் இந்த அம்மா என்ன சொன்னது என்றால் டான்சி நிலத்தை நான் வாங்கினேன். வாங்கினால் என்ன தப்பு என்று கேட்டது. வாம்மா மாட்டினாயா நீ என்று சொல்லி போட்ட கேஸ் தான் சுப்ரீம் கோர்ட் வரை போய் அந்த அம்மா உள்ளே போச்சு. வாய்க்கொழுப்பு மட்டும் இருக்கக் கூடாது. எந்த கொழுப்பு வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த அம்மா உலக மகா தப்பு ஒன்னும் செய்யவில்லை. அன்னைக்கே அந்த இடம் வேண்டாம் என்று திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி இருந்தால் பிரச்சினை இருந்திருக்காது” என பேசியிருந்தார்.
