லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனது சமூக வலைத்தளப் பின்தொடர்பாளர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், பிரபல பெண் யூடியூபர் நந்தனா ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த நந்தனா, ‘Nandu’s World’ என்ற பிரபல யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்தச் சேனலுக்கு சுமார் 28 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இந்த மோசடியில் நந்தனா தனது கணவர் ஜெ. மதுசூதனுடன் இணைந்து ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நந்தனாவும் அவரது கணவர் மதுசூதனும் இணைந்து விஜயவாடா, குண்டூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் ‘Destiny Consultancy’ என்ற பெயரில் அலுவலகங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. லண்டனில் வேலை, விசா மற்றும் ஸ்பான்சர்ஷிப் பெற்றுத் தருவதாகக் கூறி, ஒவ்வொருவரிடமும் தலா 15 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை வசூலித்ததாகவும், இதன் மூலம் ஒட்டுமொத்தமாக சுமார் 15 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு லண்டனில் வேலை பெறுவதற்கான போலியான ‘Certificate of Sponsorship’ எனப்படும் CoS ஆவணங்களையும், போலி விசா ஆவணங்களையும் வழங்கியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, லண்டனில் குடியேறிய நந்தனாவுக்கு எதிராக ஆந்திரப் பிரதேச காவல்துறை ‘Lookout Circular’ நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், லண்டனில் இருந்து ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நந்தனா வந்திறங்கியபோது, அவரை குடிவரவு அதிகாரிகள் அடையாளம் கண்டு தடுத்து வைத்தனர்.

இந்த வழக்கை ஆந்திரப் பிரதேசத்தின் என்.டி.ஆர். மாவட்டம் இப்ராஹிம்பட்டினம் காவல்துறையினர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், நந்தனா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த கன்சல்டன்சி விவகாரங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தனது கணவரே அந்தத் தொழிலை கவனித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் 3 வாரங்களில் இந்தியா திரும்பி விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் அவர் கூறியிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூபராகப் பிரபலமான நந்தனா, மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ‘மன சங்கர வர பிரசாத் காரு’ (Mana Shankara Vara Prasad Garu) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில், அதாவது Cameo Appearance-ல் நடித்துள்ளார்.
நந்தனா தனது யூடியூப் பக்கத்தில் லண்டனில் தான் வாழ்ந்து வரும் ஆடம்பரமான வாழ்க்கை முறையையும், விசா தொடர்பான பல்வேறு வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இதைப் பார்த்த அவரது பின்தொடர்பாளர்கள், நந்தனா மூலமாக லண்டனுக்குச் செல்ல முடியும் என்று நம்பி, அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஒட்டுமொத்த மோசடி விவகாரம் அம்பலமாக முக்கியக் காரணமாக இருந்தது, லண்டனில் வசிக்கும் நந்தனாவின் நெருங்கிய நண்பரான மாமில்லபள்ளி சிவகிராந்தி குமார் அளித்த புகார் எனக் கூறப்படுகிறது. அவரிடமும் நந்தனாவும் அவரது கணவர் மதுசூதனும் இணைந்து விசா நீட்டிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்காக சுமார் 13 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நந்தனா மற்றும் அவரது கணவர் மீது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் மட்டுமின்றி, லண்டனிலும் பாதிக்கப்பட்ட சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. லண்டனில் தனக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே நந்தனா இந்தியா வந்ததாகவும், ஆனால் ஹைதராபாத் விமான நிலையத்தில் போலீசாரிடம் சிக்கியதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இதனிடையே, தன் மீதான புகார்கள் அனைத்தும் பொய்யானவை என்றும், தங்களுக்கு எதிராகச் செயல்படும் சிலரின் தனிப்பட்ட வன்மம் காரணமாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நந்தனா தரப்பு தெரிவித்துள்ளது. இந்த அடிப்படையில், தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள FIR-ஐ ரத்து செய்யக் கோரி நந்தனா தரப்பு உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
‘Nandu’s World’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் நந்தனா, லண்டனில் வேலை மற்றும் விசா வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அண்மையில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.
விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நந்தனாவுக்கு, ஆந்திர மாநிலம் இப்ராஹிம்பட்டினம் காவல்துறையினர் நோட்டீஸ் வழங்கி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி, தனது வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்தில் ஆஜரான நந்தனா, அங்கு தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
நந்தனா காவல் நிலையத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து, அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகக் கூறப்படும் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் வந்து, தங்களுக்கு நேர்ந்த ஏமாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும் போலீசாரிடமும் விவரித்து வருகின்றனர்.
தன் மீதான கைது மற்றும் மோசடி தொடர்பான செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, நந்தனா தனது தரப்பு விளக்கத்தையும் அளித்துள்ளார். இந்த மோசடி விவகாரங்கள் எதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும், தனது கணவர் நடத்தி வந்த கன்சல்டன்சி தொழிலை வைத்து தனது பெயரை சிலர் திட்டமிட்டு தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்படும் நந்தனாவின் கணவர் ஜெ. மதுசூதன் இதுவரை முழுமையாகப் பிடிபடவில்லை என்றும், அவர் விரைவில் இந்தியா திரும்பி விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்றும் நந்தனா தரப்பு தெரிவித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
