அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக்குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை செய்தனர். அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த வீட்டில் வசித்து வந்த ரியா என்ற பெண் கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
ஆனால் அவர் உடலில் தலை இல்லாததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து வீடு முழுவதும் சோதனை செய்து பார்த்தபோது, அங்கிருந்த குளிர்சாதனப்பெட்டியில் ரியாவின் தலை இருந்தது. ரியாவின் கணவர் ராமானுஜ் இல்லை. இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவர் ராமானுஜ்ஜை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ராமானுஜ் போலீசில் சரணடைந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்திற்கு வெளியில் பேட்டி அளித்த ராமானுஜ்: ‘நான் என் மனைவியைக் கொலை செய்து விட்டேன். எனது சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த பிறகு சுகர் டேடியையும் கொலை செய்வேன் என தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே கொலைக்கான நோக்கம் குறித்தும், சுகர் டேடி யார் என்பது குறித்தும் போலீசார் ராமானுஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
