பூக்கெட்டிலிருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் தலைமை விமானி, மனதை பாதிக்கும் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதைத் தொடர்ந்து, உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “பாதுகாப்புக்கே ஏர் இந்தியா முதன்மையான முன்னுரிமை அளிக்கிறது. பூக்கெட்-டெல்லி விமானத்தின் தலைமை விமானிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மனதை பாதிக்கும் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. பாதுகாப்பு, உடல் தகுதி அல்லது விதிமுறை மீறல்கள் விஷயத்தில் ஏர் இந்தியா கடைப்பிடிக்கும் ‘சகிப்புத்தன்மையற்ற’ கொள்கையின்படி, அந்த விமானியின் பணி உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
ஆகஸ்ட் 4 அன்று பூக்கெட்டிலிருந்து டெல்லிக்குச் சென்றபோது திடீரென உயரத்தில் சரிவைச் சந்தித்த அந்த விமானம் தொடர்பான சம்பவத்தில், விமான விபத்து விசாரணைப் பிரிவு மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
137 பயணிகள் மற்றும் எட்டுப் பணியாளர்களுடன் சென்ற ஏர்பஸ் ஏ320 விமானம், சுமார் 300 அடி கீழே இறங்கியது. பின்னர் நிலைத்தன்மை அடைந்து பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இதில் பயணித்த பலர் காயமடைந்தனர்.
விமானத்தின் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளிலும் சிறிது நேரம் அழுத்த இழப்பு ஏற்பட்டதாகவும், இதனால் ‘ஆட்டோபைலட்’ தானியங்கி விமான இயக்கம் செயலிழந்ததுடன், சில விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் சில நொடிகள் செயல்படாமல் போனதாகவும் AAIB அறிக்கை தெரிவித்தது. இச்சம்பவத்திற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெற்றது; அப்போது பூக்கெட்டிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று, பயணத்தின்போது திடீரென உயரத்தை இழந்தது.
137 பயணிகள் மற்றும் எட்டுப் பணியாளர்களுடன் சென்ற ஏர்பஸ் ஏ320 ரக விமானமான ஏI2379, நிலைத்தன்மை அடையும் முன் சுமார் 300 அடி கீழே இறங்கியது. பின்னர் விமானம் டெல்லியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது, ஆனால் அதில் பயணித்த 24 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விசாரணையின் ஒரு பகுதியாக விமானக் குழுவினருக்குக் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் துணை விமானிக்கு ‘நெகடிவ்’ முடிவு வந்த நிலையில், முதன்மை விமானியின் ஆரம்பக்கட்ட பரிசோதனை முடிவை மேலும் உறுதிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன்பின் மேற்கொள்ளப்பட்ட உறுதிப்படுத்தும் பரிசோதனையில், மனதை பாதிக்கும் போதைப்பொருள் இருப்பது ‘பாசிட்டிவ்’ என உறுதியானது; இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா நடவடிக்கை எடுத்தது. தற்போது அந்த விமானியின் பணி உடனடியாக நீக்கப்பட்டுள்ளது.
