செப்டம்பர் 2, 2026 அன்று தமிழக சட்டமன்றத்தில் தவெக எம்.எல்.ஏ. சத்தியபாமா மாற்று சபாநாயகராக அமர்ந்து அவையை வழிநடத்தியபோது, அவர்தான் சட்டமன்ற வரலாற்றிலேயே அவையை வழிநடத்திய முதல் பெண் என்ற தகவல் பரவியது. ஆனால், இந்தத் தகவல் தவறானது என முன்னாள் எம்.எல்.ஏ. லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பே, 2009-ஆம் ஆண்டு மாற்றுத் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லீமா ரோஸ், திருவட்டாறு தொகுதி உறுப்பினராக இருந்தபோது, சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்த லீமா ரோஸ், தவெகவைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. சத்தியபாமா மாற்றுத் தலைவராக இருந்து சட்டமன்றத்தை வழிநடத்தியதை தாம் பாராட்டுவதாகவும், ஆனால் அதை தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறை எனக் குறிப்பிடுவது உண்மைக்கு மாறானது என்றும் கூறியுள்ளார்.
சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர் இல்லாத நேரங்களில், பெண் உறுப்பினர்கள் மாற்றுத் தலைவர்களாக இருந்து அவையை வழிநடத்திய சம்பவங்கள் இதற்கு முன்பும் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 2009-ஆம் ஆண்டு ஐந்தாண்டு காலத்திற்கான மாற்றுத் தலைவர்கள் பட்டியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தானும் இடம்பெற்றிருந்ததாகவும், அதன்படி சமூக நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 1996-ஆம் ஆண்டு மூத்த காங்கிரஸ் அரசியல் தலைவர் ஏ.எஸ். பொன்னம்மாள் தற்காலிக சபாநாயகராகப் பொறுப்பேற்று, புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து அவையை வழிநடத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 1937-1938 காலகட்டத்திலேயே சென்னை மாகாண சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராக ருக்மிணி லட்சுமிபதி பொறுப்பு வகித்துள்ளார். இதனால், தமிழக சட்டமன்ற வரலாற்றில் பெண் உறுப்பினர் ஒருவர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்துவது இது முதல்முறை அல்ல என்பது தெளிவாகிறது.
சத்தியபாமா மாற்றுத் தலைவராக இருந்து அவையை வழிநடத்தியதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள லீமா ரோஸ், ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் அந்தப் பொறுப்பை ஏற்று அவையை வழிநடத்தியதை பாராட்டுவதில் தங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால், ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வுகள் சட்டமன்றத்தில் நடைபெற்றுள்ள நிலையில், வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண் மாற்றுத் தலைவராக இருந்து அவையை வழிநடத்தியதாகக் கூறுவது சரியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற வரலாற்றில் ஏற்கனவே பல பெண் உறுப்பினர்கள் மாற்றுத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டு, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியுள்ள நிலையில், ஒரு நிகழ்வைப் பாராட்டுவதற்காக அதன் வரலாற்று உண்மைகளைத் திரித்து பேசுவது சரியல்ல என லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்.
