Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1, 2026 முதல் 26 முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமான NHAI-யின் வருடாந்திர கட்டண மாற்ற விதிமுறைகளின்படி, வாகனங்களின் வகையைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.30 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக முந்தைய கட்டணத்துடன் ஒப்பிடும்போது சராசரியாக 3 முதல் 5 சதவீதம் வரை கட்டணம் அதிகரித்துள்ளது. இந்த புதிய கட்டண விகிதங்கள் 2027 ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 77 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் விதிகளின்படி, இந்த சுங்கச்சாவடிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஆண்டுதோறும் வெவ்வேறு காலகட்டங்களில் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மாநிலத்தில் உள்ள 51 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதமே கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வருடாந்திர கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

பயணிகள் கார் மற்றும் ஜீப் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ஒருவழிப் பயணத்திற்கான சுங்கக் கட்டணம் பல இடங்களில் ரூ.5 வரை அதிகரித்துள்ளது. வாகனங்களின் வகை மற்றும் சுங்கச்சாவடியைப் பொறுத்து இலகுரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கான சுங்கக் கட்டணம் ரூ.240-லிருந்து ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் ரூ.380-லிருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களின் வகையைப் பொறுத்து மாதாந்திர பாஸ் கட்டணங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  வீடு புகுந்து இளைஞர் கொலை… யார் அந்த 7 பேர்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

சில பெரிய வணிக மற்றும் கனரக வாகனங்களுக்கு, பயணிக்கும் தூரம் மற்றும் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடியைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ.30 முதல் ரூ.395 வரை கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை, பெங்களூரு, சேலம், திண்டிவனம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வடக்கு, டெல்டா மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள பல்வேறு முக்கிய சுங்கச்சாவடிகளில் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. பாளையம், ஓமலூர், ராசம்பாளையம், மேட்டுப்பட்டி, நாத்தங்கரை, வீரசோழபுரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளும், பொன்னம்பலப்பட்டி, திருப்பராய்த்துறை, மணவாசி, செங்குறிச்சி, திருமந்துறை, சமயபுரம், வேலஞ்செட்டியூர், கொழிஞ்சிப்பட்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளும் இதில் அடங்கும்.

ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், சுங்கக் கட்டண உயர்வு பொதுமக்களுக்கும் வாடகை வாகன உரிமையாளர்களுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. குறிப்பாக, டீசல் விலை மற்றும் வாகன உதிரிபாகங்களின் விலை ஏற்கெனவே அதிகமாக உள்ள நிலையில், சுங்கக் கட்டண உயர்வு லாரி உரிமையாளர்களுக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சுங்கக் கட்டண உயர்வு காரணமாக சரக்குக் கட்டணமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் சரக்கு லாரிகளின் வாடகைக் கட்டணம் சுமார் 20 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறு சரக்குக் கட்டணம் அதிகரித்தால், அதன் தாக்கம் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் சுங்கக் கட்டண உயர்வு பொதுமக்களின் அன்றாட செலவிலும் மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலை எழுந்துள்ளது.

இதையும் படியுங்க  கோவையை உலுக்கிய கொடூரம்… சடலமாக மீண்ட சிறுமி

இதனிடையே, தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுமார் 30 சுங்கச்சாவடிகளின் அசல் முதலீட்டு வசூல் காலமான Concession Period முடிவடைந்துவிட்டதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சாலை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முதலீடு முழுமையாக வசூலிக்கப்பட்ட பிறகு, சுங்கக் கட்டணத்தை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடியை மூட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆனால், சாலைகளைப் பராமரித்தல் மற்றும் சாலை விரிவாக்கம் போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு தொடர்ந்து முழு சுங்கக் கட்டணமும் வசூலிக்கப்படுவதாகவும், ஆண்டுதோறும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருவதாகவும் லாரி உரிமையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டுகிறது. இதனால், சுங்கச்சாவடிகளின் வசூல் மற்றும் முதலீட்டு மீட்பு தொடர்பான விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதனிடையே, சமூக வலைத்தளங்களிலும் சுங்கக் கட்டண உயர்வு தொடர்பான விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. புதிய வாகனம் வாங்கும்போதே ஆயுள் காலச் சாலை வரியாக (Life-time Road Tax) ஒரு பெரிய தொகையை அரசிடம் செலுத்திவிடும் நிலையில், அதே சாலையில் பயணம் செய்வதற்கு மீண்டும் ஏன் சுங்க வரி செலுத்த வேண்டும் என்ற கேள்வியை வாகன ஓட்டிகள் எழுப்பி வருகின்றனர்.

சாலை வரி மற்றும் சுங்கக் கட்டணம் வெவ்வேறு நோக்கங்களுக்காக வசூலிக்கப்படுகின்றன என்ற விளக்கம் ஒருபுறம் இருந்தாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் சுங்கக் கட்டணங்கள் குறித்து வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.

இதையும் படியுங்க  மலையை விழுங்கும் கல்குவாரி மாஃபியாக்கள்.!!கண்டுகொள்ளாத கலெக்டர்… கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்.

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் மூலம் தினமும் பல கோடி ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் இதுவரை எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது, சாலை அமைத்த நிறுவனங்களுக்கு இன்னும் எவ்வளவு தொகை வழங்க வேண்டியுள்ளது,

அசல் முதலீட்டுத் தொகை எப்போது முழுமையாக வசூலிக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதுதொடர்பாக சுங்கச்சாவடிகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பல்வேறு அரசியல் அமைப்புகள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.

இந்தக் கட்டண உயர்வு மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமான NHAI மேற்கொள்ளும் வருடாந்திர கட்டணத் திருத்தத்தின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பணவீக்கக் குறியீடுகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த வருடாந்திர கட்டண மாற்றத்தில், மாநில அரசுக்கு நேரடி நிர்வாக அதிகாரம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக, எரிபொருள் விலை, வாகன உதிரிபாகங்களின் விலை உள்ளிட்ட பல்வேறு செலவுகள் ஏற்கெனவே அதிகரித்துள்ள நிலையில், தற்போது அமலுக்கு வந்துள்ள சுங்கக் கட்டண உயர்வு வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

ஒருபுறம் சாலைகளைப் பராமரிக்கவும், விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவும் சுங்கக் கட்டணம் அவசியம் என தெரிவிக்கப்படும் நிலையில், மறுபுறம் முதலீட்டுத் தொகை வசூலிக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து கட்டணம் உயர்த்தப்படுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனால் சுங்கச்சாவடிகளின் வசூல், முதலீட்டு மீட்பு காலம், பராமரிப்புச் செலவு மற்றும் எதிர்கால கட்டண நிர்ணயம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

46 minutes ago at 46 minutes ago