சென்னை தி.நகர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., தி.நகர் சத்யாவுக்கு, சமீபகாலமாக எதைத் தொட்டாலும் சிக்கல்தான். ரியல் எஸ்டேட் ஆசையைக் காட்டி, முதலீடுகளை அள்ளிய அந்தப் பிரபல ‘ஒற்றை எழுத்து’ நிறுவனத்திடம், சத்யா மட்டுமே முதலீடு செய்தத் தொகை 1,000 கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள்.
நிலங்களை வாங்கி விற்று, வரும் லாபத்தில் 30 சதவீதத்தை வட்டி போல் அள்ளிக் கொடுப்பதாகச் சொன்ன அந்த நிறுவனத்தின் மாய வார்த்தைகளை நம்பி, சத்யா தனது சொந்தப் பணத்தை மட்டுமல்லாது, எடப்பாடி பழனிசாமியும் பணத்தை கொண்டு போய் அப்படியே கொட்டியிருக்கிறார்.
கையை விரித்த நிறுவனம்
முதலீடுகள் குவிந்த வேகத்தில், ‘ஒற்றை எழுத்து’ நிறுவனம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக்குவித்தது. ஆனால், திடீரென சந்தையில் ஏற்பட்ட தொய்வு காரணமாக நிலங்கள் எதுவும் விற்காமல் முடங்கின. போட்ட பணத்தைக் கேட்ட சத்யாவுக்கு, “நிலம் போணியாகவில்லை, விற்ற பிறகுதான் அசல், வட்டி எல்லாம்” என்று கூலாகக் கையை விரித்துவிட்டது அந்த நிறுவனம்.

இந்த செய்தி எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்குப் போக, ரத்தக் கொதிப்பில் உறைந்துபோனார். ‘என் பணத்தைக் கொண்டு போயா அங்கே மாட்டி வைத்தாய்?’ எனக் கடுப்பான எடப்பாடி பழனிசாமி, சத்யாவை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. “இன்னும் ரெண்டு மாசம்தான் டைம்… பணத்தை செட்டில் பண்ணலனா விளைவுகளே வேறு!” என கெடு விதித்து அலறவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவுக்கு குட்பை?
கட்சியில் மரியாதை போச்சு, கையில் இருந்த பணமும் போச்சு… இனி அவ்வை சண்முகம் சாலையில் (அதிமுக தலைமை அலுவலகம்) சுற்றிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்த சத்யா, மெல்ல மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கிவிட்டார்.
சமீபத்தில் தி.நகரில் நடந்த ஒரு பிரம்மாண்ட திருமண விழாவில், தவெக முக்கிய நிர்வாகிகளை ரகசியமாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார் சத்யா. “கட்சியில் இணையத் தயார், நல்ல பொறுப்பு தருவீர்களா?” எனக் தூண்டில் போட்டிருக்கிறார். ஆனால், அங்கே அவருக்குப் பெரிய முட்டுக்கட்டையாக நிற்பது தவெகவின் ஈரோடு சீனியர் கே.ஏ.செங்கோட்டையன். பழைய அரசியல் கணக்குகளை வைத்து செங்கோட்டையன் முரண்டு பிடிப்பதால், அவரைச் சாந்தப்படுத்த சத்யா டீம் தீவிர முயற்சி செய்து வருகிறது.
திமுக பக்கம் தாவ பிளான் B!
ஒருவேளை விஜய் தரப்பு கதவைச் சாத்தினால், ‘பிளான் B’ ஆக ஆளுங்கட்சியான திமுக பக்கம் ஒதுங்கவும் காய்களை நகர்த்தி வருகிறார் சத்யா. சேலத்துக்காரரின் கெடு முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், சத்யா எந்தக் கரையேறப் போகிறார் என்பதே கேள்வி.
