பரந்தூர் பரப்பனூர் விமான நிலைய எதிர்ப்பு, மக்கள் போராட்டம், ஆட்சிக்கு எதிரான தொடர் சிக்கல்கள்… இத்தனை நெருக்கடிகளையும் ஒரே ஒரு வார்த்தையில் தட்டித்தூக்கி திசைதிருப்பிவிட்டது தமிழக வெற்றிக் கழகம்!
“அடுத்த பிரதமர் விஜய்தான்!” – த.வெ.க அமைச்சர்கள் மேடைக்கு மேடை இந்த முழக்கத்தைக் கையில் எடுத்ததும், அதுவரை பரந்தூர் பக்கம் திரும்பியிருந்த கேமராக்கள் அனைத்தும் பனையூர் பக்கமும், சத்தியமூர்த்தி பவன் பக்கமும் திரும்பின.
காதில் வாங்காத பனையூர்… கட் செய்யப்பட்ட போன் கால்கள்!
விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக த.வெ.க-வினர் முன்னிறுத்தியது, காங்கிரஸ் வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. சத்தியமூர்த்தி பவன் கடும் அப்செட்டில் மூழ்கியது. “கூட்டணி தர்மம்னு ஒன்னு இருக்கு! உங்க ஆட்களுக்குக் கொஞ்சம் கடிவாளம் போடுங்க…” என்று காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி கதறிப் பார்த்தும், பனையூரில் இருந்த த.வெ.க மேலிடம் அதைக்காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில், முதல்வருக்கு ஆலோசனை சொல்லும் முக்கியப் புள்ளிகள்கூட பிரவீன் சக்கரவர்த்தியின் போன் கால்களை அட்டெண்ட் செய்வதை நிறுத்திவிட்டனர். நிலைமை கைமீறிப் போவதையும், தங்களைப் பொருட்டாகவே மதிக்காததையும் கண்டு பொறுமையிழந்த காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், “ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை என்றால், அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு கூட்டணியை விட்டு வெளியேறுவோம்!” என்று மேடையில் ஆவேசமாக வெடித்தார்.

விஜயின் மவுன சாட்சி… டெல்லியின் உத்தரவு
இந்த அரசியல் களேபரத்துக்கு நடுவேதான், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்கரவர்த்தியும் அவசர அவசரமாகக் கோட்டைக்கு விரைந்து சென்று முதல்வர் விஜய்யைச் சந்தித்தனர். “கூட்டணிக்குள் வீண் சச்சரவு வேண்டாம்… இந்த சர்ச்சைக்கு உடனே முற்றுப்புள்ளி வையுங்கள்” என்று இரு தலைவர்களும் அடுக்கடுக்காகப் புகார்களை வாசிக்க, முதல்வர் விஜய்யோ எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக “மவுன சாட்சியாக” கேட்டுக்கொண்டாராம்.
அதேநேரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா இந்த விவகாரத்தை டெல்லி மேலிடமான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வரை கொண்டு சென்றார். ஆனால் டெல்லியிலிருந்து வந்த பதிலோ வேறு ரகம்: “அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள். பொறுமையாக இருங்கள். த.வெ.க-வுக்குள்ளேயே இருக்கும் புல்லுருவிகளை அவர்களே களையெடுக்கட்டும்!” என்று சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

திசைதிருப்பப்பட்ட மக்கள் பிரச்சனைகள்!
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளின் போராட்டம், அரசுக்கு எதிரான அதிருப்திகள் என அனைத்து அழுத்தங்களையும், இந்த ‘பிரதமர் விஜய்’ பஞ்சாயத்து ஒரே நாளில் மறக்கடித்துவிட்டது.
அமைச்சரின் ராஜினாமா மிரட்டல், மேலிடத்தின் சமரசப் பேச்சுவார்த்தை என அனைத்தும் முடிவுக்கு வந்ததாகத் தோன்றினாலும், காங்கிரஸை அலறவிட்டுத் தன் அரசியல் ஆட்டத்தை த.வெ.க மிகச் கச்சிதமாக நடத்தி முடித்திருக்கிறது என்பதே கள நிலவரம்.
