சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் பிள்ளையார் கோவில் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது 2-வது மகள் புவனேஸ்வரி (27). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2024-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணையைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கு புவனேஸ்வரியை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின்போது பெண்ணுக்கு 50 சவரனும், மாப்பிள்ளைக்கு 20 சவரன் நகைகளும், ரூ.15 லட்சம் மதிப்புள்ள காரும், வீட்டு உபயோகப் பொருட்களும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
இவ்வளவு கொட்டி கொடுத்த பிறகும் புவனேஸ்வரியை கூடுதல் வரதட்சணை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி கோவிலில் திருவிழாயொட்டி தாய் வீட்டிற்கு புவனேஸ்வரி வந்துள்ளார். அப்போது மனைவியிடம் பேசிய கணவர் ஜானகிராமன் வீட்டுக்கு வர வேண்டாம். உன் தாய் வீட்டிலேயே இரு என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான புவனேஸ்வரி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் புவனேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே புவனேஸ்வரி தந்தை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
அதில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளுக்குள் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. உயிரிழந்த புவனேஸ்வரிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
