“எங்கள் ஆட்சியில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுகிறது; திமுக ஆட்சியில் தனியாருக்குக் தாரைவார்க்கப்பட்ட கனிம வளங்கள் அனைத்தும் மீட்கப்பட்டுவிட்டன” என மானியக் கோரிக்கையின் போது சட்டமன்றத்தில் தவெக அரசு உதிர்த்த வார்த்தைகள் இவை.
தவெக அரசு ஒருபுறம் வீர வசனம் பேச, மறுபுறம் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவோ, “எங்கள் கட்சியில் யாரும் குவாரி நடத்தவில்லை, மைனிங் பிசினஸ் செய்யவில்லை” என மேடைதோறும் முழங்கி வருகிறார். ஆனால், உண்மை என்ன? ஆட்சி மாறியதே தவிர, கனிமவளத் துறையில் காட்சி மாறவில்லை என்பதே கள நிலவரம்.

அதிகாரிகளின் பகிரங்க ‘வசூல்’
சமீபத்தில் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கனிமவளத்துறை உதவி இயக்குநர்கள் (AD) சார்பில், குவாரி தொழிலதிபர்களை அழைத்து ஒரு அவசரக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் அதிகாரிகள் பேசிய பேச்சுதான் தவெக அரசின் ‘சுத்தமான’ முகத்திரையைக் கிழித்தெறிந்துள்ளது.
“கடந்த திமுக ஆட்சியில் எவ்வளவு ‘கவனிப்பு’ கொடுத்தீர்களோ, அதே தொகையை எந்தப் பாக்கியும் இல்லாமல் பழையபடியே கொடுத்து விடுங்கள்” என ஏடி-க்கள் ஓப்பனாகவே ஆர்டர் போட்டுள்ளனர். அதிகாரிகளின் இந்தத் துணிச்சலான ஆணை, மேலிடத்தின் ஆசி இல்லாமல் சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்களுக்கு ஏமாற்றம்… ஆளுங்கட்சிக்கு அறுவடை!
இதன் விளைவாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மணல், கல், மற்றும் கிராவல் குவாரி தொழில் செய்யும் அதிபர்கள், பழைய பாதையிலேயே அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் தாராளமாகக் கவனித்து வருகின்றனர்.
சட்டமன்றத்தில் ‘இயற்கையைக் காக்கிறோம்’ எனப் போலி பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு, பின்னணியில் மாமூல் வேட்டையைத் தங்கு தடையின்றி நடத்தும் தவெகவின் இந்த இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘ஊழலற்ற ஆட்சி’ என்ற முழக்கத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், இப்போது பழைய கனிம வளக் கொள்ளையர்களின் கரங்களோடு கரம்கோர்த்து நிற்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யப்பட்ட மாபெரும் துரோகம் என கொந்தளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
