தமிழக முதல்வர் விஜய் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராகும் சாத்தியம் உள்ளதா என்ற விவாதம் தற்போது அரசியல் வட்டாரங்களில் தீவிரமாகியுள்ளது. 2024-ஆம் ஆண்டு முழுநேர அரசியலில் களமிறங்கிய விஜய், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது தேசிய அளவிலும் முக்கிய அரசியல் முகமாக பார்க்கப்படுகிறார்.
சமீபத்தில் வெளியான இந்தியா டுடே–சி-வோட்டர் ‘Mood of the Nation’ கருத்துக்கணிப்பில், இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்களில் பிரதமர் நரேந்திர மோடி 48.7 சதவீத ஆதரவுடன் முதலிடத்திலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 27.1 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். தமிழக முதல்வர் விஜய் 9.2 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
தேசிய அளவில் நீண்ட காலமாக அரசியலில் இருக்கும் தலைவர்களுக்கு மத்தியில், அரசியலுக்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. மம்தா பானர்ஜி 2 சதவீதமும், அகிலேஷ் யாதவ் 1.7 சதவீதமும், அரவிந்த் கெஜ்ரிவால் 1.2 சதவீதமும் ஆதரவைப் பெற்றுள்ளனர்.
மேலும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்த சிறந்த தலைவர் யார் என்ற கேள்வியிலும் விஜய் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றுள்ளார். ராகுல் காந்தி 29 சதவீத ஆதரவுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், விஜய் 12.2 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். மம்தா பானர்ஜி 8.5 சதவீதமும், அரவிந்த் கெஜ்ரிவால் 7.5 சதவீதமும் ஆதரவைப் பெற்றுள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பு 2026 ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மக்களவைத் தொகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இதில் 25,184 பேரிடம் நேரடியாக கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இதனுடன், கடந்த ஆறு மாதங்களில் சி-வோட்டர் அமைப்பு வழக்கமாகத் திரட்டிய 91,795 பேரின் கருத்துக்கணிப்புத் தரவுகளும் இணைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2026-ல் நடைபெற்ற முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடும்போது, தற்போதைய அரசியல் சூழலில் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு 57.7 சதவீத ஆதரவும், ராகுல் காந்திக்கு 26.6 சதவீத ஆதரவும் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் விஜய்யின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால், தற்போதைய கருத்துக்கணிப்பில் விஜய் 9.2 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் “இன்று தமிழகத்தின் முதலமைச்சர்… நாளை பாரதத்தின் பிரதமர்” மற்றும் “செங்கோட்டையை நோக்கி தளபதி” போன்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

விஜய் தமிழகத்தை மட்டுமின்றி எதிர்காலத்தில் இந்தியாவையும் வழிநடத்தும் ஆற்றல் கொண்டவர் என்றும், 2029 மக்களவைத் தேர்தலை நோக்கி தேசிய அரசியலில் அவரை முன்னிறுத்த வேண்டும் என்றும் தவெக தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. விஜய் எதிர்காலத்தில் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில், விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் கருத்துகளுக்கு அரசியல் ரீதியாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. தேசிய அளவில் வலுவான கட்சிக் கட்டமைப்பு, மாநில அளவிலான அமைப்பு மற்றும் நாடு முழுவதும் வாக்கு வங்கி இல்லாமல் பிரதமர் பதவிக்கான அரசியல் பயணத்தை முன்னெடுப்பது சவாலானது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்திற்கு வெளியே தவெகவுக்கு தற்போதைய நிலையில் வலுவான அரசியல் கட்டமைப்பு அல்லது குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இல்லை என்பதால், கருத்துக்கணிப்பில் கிடைத்துள்ள 9.2 சதவீத ஆதரவை எதிர்கால தேர்தல் வெற்றியாக மாற்றுவது விஜய்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளையில், விஜய்யின் அரசியல் பயணம் தமிழக எல்லையைத் தாண்டி தேசிய அளவில் கவனத்தைப் பெறத் தொடங்கியிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் விஜய்க்கு இருக்கும் பிரபலமும், சமூக வலைத்தளங்களில் அவரைச் சுற்றி நடைபெறும் அரசியல் விவாதங்களும் அவரது தேசிய அளவிலான அடையாளத்திற்கு முக்கிய காரணிகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய அளவில் மாற்று அரசியல் முகமாக அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிறுத்தப்பட்டதைப் போல, தற்போது இளம் தலைமுறையினர் மத்தியில் விஜய் புதிய அரசியல் முகமாக உருவெடுத்து வருவதாகவும் கருத்துகள் வெளியாகியுள்ளன. இதேநேரத்தில், விஜய்யின் ஆதரவு தமிழகத்தைத் தாண்டி வடகிழக்கு மற்றும் சில வட மாநிலங்களிலும் கவனத்தைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேசிய அரசியலில் பல தசாப்தங்களாக இருக்கும் மூத்த தலைவர்களுக்கு மத்தியில், குறுகிய கால அரசியல் பயணத்திலேயே விஜய் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த ஆதரவு தற்காலிக அரசியல் அலையா அல்லது 2029 மக்களவைத் தேர்தலில் பெரிய அரசியல் திருப்புமுனையாக மாறுமா என்பது இனிவரும் காலத்தில்தான் தெரியவரும்.
தற்போதைய நிலையில், பிரதமர் பதவிக்கான விருப்பத் தேர்வில் நரேந்திர மோடி முதலிடத்திலும், ராகுல் காந்தி இரண்டாவது இடத்திலும், விஜய் மூன்றாவது இடத்திலும் இருப்பது தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ள முக்கிய அம்சமாகியுள்ளது. இதனால், “தமிழக முதல்வர் விஜய்… எதிர்கால இந்திய பிரதமரா?” என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது..
இந்திய அரசியல் வரலாற்றில் தென் மாநிலங்களில் இருந்து ஒருவர் பிரதமராகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகின்றன. 1996 இல் கர்நாடகாவைச் சேர்ந்த ஹெச்.டி. தேவகவுடா பிரதமரானதே கடைசியாகும். அதன் பிறகு தற்போதைய இளம் தலைமுறையினரும் (Gen Z மற்றும் Gen Alpha), தென் மாநில மக்களும் விஜய்யை ஒரு மாற்று தேசிய சக்தியாகப் பார்க்கத் தொடங்கியிருப்பதுதான் இந்த 9% ஆதரவுக்கு மிக முக்கியக் காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்
