செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார்(23). இவர் கடந்த 16ம் தேதி இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டியதை அடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த 20ம் தேதி சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீஸ் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. பீரவின்குமார் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தாலும் அந்தஸ்து காரணமாக பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்படி இருந்த போதிலும் காதலித்து வந்துள்ளனர்.
இதனால் கடுப்பான பெண்ணின் தந்தை கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகியான ஏழுமலை பெண்ணின் சகோதரர் கவுதம், கூலிப்படையைச் சேர்ந்த நிதிஷ், மணிகண்டன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இந்த கொலையில் சம்மந்தப்பட்ட சிலரை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் இளைஞர்கள் பீரவின்குமார் சடலத்தை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
