திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொல்லகுப்பம் ஊராட்சி, புதூர் பகுதியை சேர்ந்தவர் குமார்(40). இவரது மனைவி ரம்யா(35). இந்த தம்பதிக்கு 14 மற்றும் 9 வயதில் இரண்டு மகள்களும், 5 வயதில் மகனும் உள்ளனர். குடிபழக்கத்திற்கு அடிமையான குமார் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல் குமார் மீண்டும் போதையில் வீட்டிற்கு சென்று மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் பொறுமையை இழந்த ரம்யா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தாலி கட்டிய கணவன் என்று கூட பாராமல் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரி வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் தினமும் குடித்து விட்டு டார்ச்சர் செய்த கணவனை கொலை செய்துவிட்டதாக கூறி வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் ரம்யா சரணடைந்தார்.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப்பதிவு செய்து ரம்யாவை கைது செய்தனர்.
இதனிடையே தூங்கி எழுந்த 3 குழந்தைகளும் தந்தை இறந்துவிட்டதை அறிந்தும், அம்மாவை தேடியும் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ரம்யாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
