https://republictn.com/

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாகக் கருதப்படும் பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நள்ளிரவு கோலாகலமாகத் தொடங்குகிறது.

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக்கோப்பை தொடரில், முதல் முறையாக 48 நாடுகள் பங்கேற்கின்றன. பங்கேற்கும் அணிகள் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா நான்கு அணிகள் இடம்பெற்றுள்ளன.

புள்ளிகள் அடிப்படையில் அணிகள் ரவுண்ட் ஆப் 32, ரவுண்ட் ஆப் 16, காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி சுற்றுகளுக்கு முன்னேறும்.

இந்த தொடரின் முதல் போட்டி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி நடைபெறும் மெக்சிகோ சிட்டியில் அமைந்துள்ள எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 83 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை கண்டு ரசிக்க முடியும்.

சொந்த மண்ணில் விளையாடும் மெக்சிகோ அணி, உள்ளூர் சூழல் மற்றும் வேகமான ஆட்டத்தை தங்களின் பலமாக நம்பியுள்ளது. தனிப்பட்ட வீரர்களின் திறமையை விட அணியின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு மற்றும் பந்தை வேகமாக நகர்த்தும் திறன் அந்த அணியின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.

மறுபுறம், தென்னாப்பிரிக்க அணி வலுவான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளது. பயிற்சியாளர் யூகோ பப்ரூசின் வியூகங்களும் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த போட்டி மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாளை காலை 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் செக் குடியரசு அணிகள் மோதுகின்றன.

உலகக்கோப்பை தொடர் மெக்சிகோவில் தொடங்குவதையொட்டி, அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய வீதிகள் அனைத்தும் ரசிகர்கள் கூட்டம், தேசியக் கொடிகள் மற்றும் நட்சத்திர வீரர்களின் பிரம்மாண்ட பதாகைகளால் களைகட்டியுள்ளன.

நடப்பு சாம்பியனான லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் களமிறங்குகிறது. கடந்த உலகக்கோப்பையில் மிகக் குறைந்த வித்தியாசத்தில் பட்டத்தை இழந்த கிலியன் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணியும் இம்முறை கோப்பையை வெல்லும் உறுதியுடன் களமிறங்கியுள்ளது.

மேலும், கிறிஸ்தியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, நெய்மர் இடம்பெறும் பிரேசில் அணி மற்றும் இளம் வீரர்கள் நிறைந்த ஸ்பெயின் அணியும் கோப்பியை வெல்லும் முக்கிய அணிகளாகக் கருதப்படுகின்றன. இதனால் இந்த உலகக்கோப்பை தொடரின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த உலகக்கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை சுமார் 7,000 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் பரிசுத் தொகையை விட சுமார் 50 சதவீதம் அதிகமாகும்.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் 478 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 315 கோடி ரூபாயும், மூன்றாம் இடம் பெறும் அணிக்கு 277 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

மேலும், உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் பரிசுத் தொகையை உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 minutes ago at 10 minutes ago