சென்னை அருகே பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (எ) மைனா குட்டி (47). இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று திருநீர்மலை அம்பேத்கர் சிலை அருகே தனது நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டு கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் அன்பழகனை சுத்துப்போட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அன்பழகன் அவர்களிடம் தப்பிக்க உயிர் பிழைக்க அருகில் இருந்த திமுக கட்சி அலுவலகத்திற்குள் சென்றார்.
அப்படி இருந்த போதிலும் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது. இதில், அன்பழகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அன்பழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
