தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் தொடர்பாக தமிழக வெற்றி கழகம் (தவெக) அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். “திமுக வழியிலேயே தவெக அரசு செயல்படுகிறது. இது வரலாற்றுத் துரோகம்” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1-ஆம் தேதியையே “தமிழ்நாடு நாள்” எனக் கொண்டாட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஆனால், முந்தைய திமுக அரசு, பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்டக் கோரி தீர்மானம் முன்வைத்த ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தது.
தற்போது, தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசும் ஜூலை 18-ஐ முன்னிட்டு பள்ளிகளில் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும், பரிசுகளையும் அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக, திமுக அரசின் அதே நடைமுறையை தவெக அரசும் தொடர்வது வரலாற்றைத் திரிக்கும் செயல் என்றும், இது தமிழக வரலாற்றுக்கு செய்யப்படும் துரோகம் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள கருத்தில், “1956 நவம்பர் 1-ஆம் தேதியில்தான் மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டு, மெட்ராஸ் மாநிலம் புதிய நிர்வாக வடிவத்தைப் பெற்றது.
எனவே, அந்த நாளைத்தான் மாநிலத்தின் பிறந்தநாளாகக் கொண்டாட வேண்டும். பெயர் மாற்றம் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளை மாநிலத்தின் பிறந்தநாளாகக் கொண்டாட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “திமுக செய்த வரலாற்றுத் திரிபை, புதிய தவெக அரசும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்வது வரலாற்றைச் சிதைக்கும் அபத்தமான செயல். மாற்று அரசியலை வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசு, திமுகவின் முடிவுகளையே பின்பற்றுவது ஏமாற்றமளிக்கிறது” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இதனிடையே, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன. தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர்கள், “ஆன்மீக விவகாரங்களிலும், இந்துக்களின் உணர்வுகள் தொடர்பான அணுகுமுறையிலும், தற்போதைய தவெக அரசு முந்தைய திமுக அரசின் மறுபதிப்பைப் போலவே செயல்படுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
மாற்று அரசியலை முன்னிறுத்தி ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக அரசு, வரலாற்று மற்றும் நிர்வாக முடிவுகளில் முந்தைய திமுக அரசின் கொள்கைகளையே தொடர்ந்து செயல்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது தமிழக அரசியலில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. தமிழ்நாடு நாள் எப்போது கொண்டாடப்பட வேண்டும் என்ற விவகாரமும் அரசியல் அரங்கில் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
