மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே போர் உக்கிரம் அடைந்து ஐந்தாவது மாதமாகத் தொடர்கிறது. இந்நிலையில், ‘டொனால்ட் டிரம்ப் இரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினாலும், வெளியில் போர் அச்சுறுத்தல் விடுக்கிறார்’ என அமெரிக்காவின் இரட்டை வேடத்தை ஈரான் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
மறுபுறம், இந்த மோதலால் அமெரிக்க இராணுவத்தின் தற்காப்புப் படைகள் சந்தித்து வரும் பெரும் நெருக்கடி குறித்த பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பென்டகனுக்கு வந்த அதிர்ச்சி எச்சரிக்கை
ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளபதியான ஜெனரல் அலெக்சஸ் கிரின்கேவிச், பென்டகனுக்குத் (அமெரிக்க பாதுகாப்புத் துறை) தனிப்பட்ட முறையில் ஒரு எச்சரிக்கை அறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலைத் தொடர்ந்து பாதுகாக்க அமெரிக்கக் கடற்படை மிகக் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உடனடியாகத் தனக்கு மற்றொரு கடற்படை அழிப்புக் கப்பல் வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் இஸ்ரேலைப் பாதுகாப்பதை விடத் தனது சொந்த நாடான அமெரிக்காவின் தாயகப் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் ஆபத்து
போரில் யார் வாழ வேண்டும், யார் இறக்க வேண்டும் என்பதைச் செயற்கை நுண்ணறிவாலே தீர்மானிக்க முடியுமா? அது தவறான இலக்கைக் கணித்தால் யார் பொறுப்பேற்பது? என்ற கேள்விகளும் இந்த நவீனப் போரில் எழுந்துள்ளன. மனிதர்கள் கட்டுப்பாட்டு வளையத்தில் இருந்து ஒப்புதல் அளித்தாலும், பரிந்துரைகளை மேற்பார்வையிட்டாலும் ஆபத்துகள் குறையவில்லை.
தீர்ந்து வரும் ஏவுகணைகள்: தவிக்கும் கடற்படை
ஈரான், யேமனின் ஹூதி போராளிகள் ஏவும் ஏவுகணைகளை இடைமறிக்க அமெரிக்காவின் பேட்ரியாட் மற்றும் பிற ஏவுகணைகளின் கையிருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது.
ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியதைத் தொடர்ந்து, ஈரானியத் துறைமுகங்களை முற்றுகையிட டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் உலக அளவில் எண்ணெய் மற்றும் முக்கியப் பொருட்களின் போக்குவரத்து முடங்கியுள்ளது.
பராமரிப்புச் சிக்கல்
ஸ்பெயினில் அமெரிக்காவின் 5 போர்க்கப்பல்கள் உள்ள போதிலும், தினமும் நடக்கும் தீவிரமான தாக்குதல்களால் போர்க்கப்பல்களைப் பராமரிக்க முடியாமல் அமெரிக்கக் கடற்படை திணறி வருகிறது.
இஸ்ரேலின் சொந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை விட, அமெரிக்காவின் ‘தாட்’ மற்றும் கடற்படை இடைமறிப்பு ஏவுகணைகளே இஸ்ரேலைக் காப்பாற்றப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இஸ்ரேலைப் பாதுகாக்கும் அதே வேளையில், நேட்டோ எல்லைகளில் ரஷ்யாவின் அச்சுறுத்தலையும் சமாளிக்க வேண்டிய நிலையில் அமெரிக்க ஐரோப்பியக் கட்டளைப் பிரிவு உள்ளது. கடற்படை வளங்கள் சுருங்கி வரும் நிலையில், அமெரிக்காவால் இஸ்ரேலுக்கு வழங்கும் ஆதரவை எந்த அளவிற்குத் தொடர முடியும் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
