மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும், பல்வேறு முறைகேடுகளை கண்டித்தும் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த், வேலைவாய்ப்பில்லா இளைஞர்களை குறித்து “கரப்பான் பூச்சிகள், ஒட்டுணிகள்” என விமர்சனம் செய்ததாக கூறப்படும் விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அபிஜித் திட்கே என்பவரால் கடந்த மாதம் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” என்ற சமூக ஊடக அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டது. இக்கட்சிக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சில பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அண்மையில் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டு செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது.
இந்நிலையில், நீட்தேர்வு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும், கரப்பான் பூச்சி கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக கட்சித் தலைவர் அபிஜித் இன்று காலை இந்தியா வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜந்தர் மந்தர் போராட்டத்திற்காக கரப்பான் பூச்சி கட்சி முறையான அனுமதி பெறவில்லை என டெல்லி காவல்துறை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேசமயம் போராட்டத்தை முன்னிட்டு மற்றும் கட்சித் தலைவர் வருகையை கருத்தில் கொண்டு டெல்லியில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தலைநகரில் தற்போதைய நிலை பரபரப்பாக காணப்படுகிறது.
