தோல்விக்கான காரணங்களை மறைக்காமல் கூறும்படி தன் கட்சியினரிடம் திமுக தலைவர் கேட்டு வருகிறார். கடந்த ஆட்சி பற்றிய உண்மையான விமர்சனங்களை துக்ளக் உள்ளிட்ட சில பத்திரிகைகள் தொடர்ந்து வெளியிட்டும் அதையெல்லாம் படிக்கத் தவறியது முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். கார்ட்டூன் மட்டும் பார்த்திருந்தால் கூட ஓரளவு புரிந்திருக்கலாம்.
முரசொலி, தினகரன் மட்டும் படித்து விட்டு, அதில் வரும் செய்திகள்தான் உண்மை என்று நம்பியதால், மக்களின் மனநிலை புரியாமலே போய் விட்டது. சரி, பரவாயில்லை. அவரே கேட்பதால் இப்போது சுருக்கமாக நினைவுபடுத்துவோம். முக்கியமாக முன்னாள் முதல்வர் பேசிய பேச்சுகள்-அந்த பாணி ஒரு காரணம். ‘இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் திமுகதான் ஜெயிக்கும். எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது. இந்த மு.வே.மு.க.ஸ்டாலின் தான் தமிழகத்தை என்றும் ஆள்வான்…’ ரகப் பேச்சுகளை மக்கள் எப்படி ரசிப்பார்கள்?
மித மிஞ்சிய தன்னம்பிக்கை, ஆணவத்தின் எல்லையைத் தொடும் அளவுக்குப் போய் விட்டது என்பதை அவர் கடைசி வரை உணரவில்லை. உணர்ந்தவர்களும் அவரிடம் சொல்லவில்லை. முக்கியமாக, அவருக்கு எழுதிக் கொடுத்த அந்த ஆசாமி ஏதோ கற்பனை உலகிலேயே சஞ்சரித்து வந்திருக்கிறார். (இப்போதும் அவரேதான் எழுதித் தருகிறார் போல இருக்கிறது)
அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தால், அது உண்மையா? இல்லையா? என்று சிறிதும் ஆராயாமல், மத்திய அரசை எச்சரித்தது, ஊழல் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதே அமைச்சர்களை அதே துறைகளில் தொடர வைத்தது, மீண்டும் அவர்களையே தேர்தலில் நிறுத்தியது-இவையெல்லாம் எப்படி மக்களைக் கவரும்?
கட்சியில் சீனியர்கள் பலர் இருக்க, தன் மகனை துணை முதல்வராக்கியது எத்தனை பேருக்கு அதிருப்தி ஏற்படுத்தியிருக்கும்? தொழில் முதலீடுகள் பெற வெளிநாடுகளுக்குச் சென்று வந்த பிறகும், முதலீடுகள் பற்றிய உண்மையான விவரங்களை வெளியிடாமல், ‘ இந்த வெள்ளை பேப்பர்தான் வெள்ளை அறிக்கை’ என்று பதிலளிக்கும் அமைச்சர்களின் அலட்சியப் போக்கை மக்கள் எப்படி ஏற்பார்கள்?
இப்படி எத்தனையோ…!
தங்களைப் பற்றிய நடுநிலையாளர்களின் விமர்சனங்களை கொஞ்சமாவது மதித்துக் கேட்டிருந்தால் முடிவுகள் மாறியிருக்கலாமோ என்னவோ! ஆனால், என்ன செய்வது? விதியை யாராலும் மாற்ற முடியாது என்பது சனாதனக் கருத்து. திமுகவினருக்குப் பிடிக்கா விட்டாலும் அதுதான் உண்மை” எனத் தெரிவிடத்துள்ளார் பத்திரிகையாளர் துக்ளக் சத்யா
